Shadow

“தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் ஆக்கிரமிக்கிறான்” – ஜாக்குவார் தங்கம்

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் சங்கத் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “இந்தப் படத்தில் கவர்ச்சிகரமான காட்சிகளைப் பாடலில் பார்த்தோம். கவலைப்பட வேண்டாம் இது மாதிரி எடுத்தால் இன்று நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தப் படம் ஓடிவிடும். ஏன் என்றால் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் நன்றாக ஓடியது. அது மாதிரி சில படங்களும் ஓடின. அப்படி ஒரு படத்தைப் பார்த்த நான் பயந்தேன். மகளிர் சங்கம் போராட்டம் செய்வார்களே என்று. அதே போல போராட்டம் நடத்தினார்கள். எனது அலுவலகம் முன்பு கூடப் போராட்டம் நடத்தினார்கள். படம் பெரிய வெற்றிபெற்றுவிட்டது. அதே போல் இந்தப் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இருக்கின்றன. நிறைய காட்சிகள் எடுத்து சிலவற்றைத்தான் இதில் வைத்திருப்பார்கள். அனைத்து காட்சிகளும் ஒளிப்பதிவாளர்தான் பார்த்திருப்பார். இந்தப் படம் ஓடிவிடும் கவலை வேண்டாம். சினிமாவுக்கு இஷ்டப்பட்டு வந்தால் வெற்றி பெறலாம். தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு வரவேண்டாம் இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டால் வெற்றி உறுதி. சினிமாவில் எப்படிப்பட்ட பாடல் காட்சிகள் எடுத்தாலும் எடுங்கள். ஆனால் சாராயத்தின் பெருமை பேசும் பாடல்கள் எழுத வேண்டாம். அப்படிப்பட்ட காட்சிகள் வைக்க வேண்டாம். ஏனென்றால் இன்று தமிழ்நாடு கெட்டுப் போய் இருக்கிறது. 85% பேர் குடித்துக் கெட்டுப் போயிருக்கிறார்கள். எனவே குடிக்கிற மாதிரி காட்சிகள் தேவையில்லை. எனக்கு 68 வயதாகிறது. எவ்வளவு திடமாக ஆரோக்கியமாக இருக்கிறேன். இந்த வயதில் இவ்வளவு உடல் நலத்துடன் இருக்கிறேன். ஆனால் இன்று 20 வயது இளைஞனுக்குக் கூட கை நடுங்குகிறது கேட்டால் குடிக்குப் பழகிக்கொண்டு விட்டேன். விட முடியவில்லை என்கிறான்.அந்த அளவுக்கு குடித்துக் குட்டிச்சுவராக்கி இருக்கிறான். முன்பெல்லாம் ஊருக்கு ஒரு குடிகாரன் இருப்பான். எங்கள் ஊர் தூத்துக்குடிப் பக்கம் கிராமம். அங்கு ஒரு குடிகாரனைப் பார்த்தால் எல்லாரும் பயந்து விலகி ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஆனால இன்று நிலைமை எப்படி ஆகிவிட்டது பாருங்கள்?

தமிழர்கள் நாம் வாழும் நாட்டையும் மண்ணையும் என்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இன்று தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் இந்திக்காரர்கள் ஒரு கோடியே 70 லட்சம் பேர் ஓட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஓட்டுக்கு நுழைபவன் நாளை வீட்டுக்கும் வருவான். நமக்கு குடியிருக்க வீடு வேண்டுமா வேண்டாமா? இப்படியே விட்டால் நாளைக்கு நாம் இருக்க வீடு இருக்காது. அடுத்த தலைமுறைத் தமிழனுக்கு வாழ இடமிருக்காது. இந்திக்காரன் ஆதிக்கம் இப்படி அதிகரித்து வருகிறது. ஓட்டுக்கு வருபவன் இப்படியே போனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே ஆக்கிரமித்து விடுவான். நாளைக்கு வீடு கட்ட இடம் இருக்காது. எங்களது ஸ்டண்ட் மேன் யூனியன் இடத்தை விலைக்குக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். உரிய விலையை விடக் கூடுதலாக 10 கோடி தருகிறேன் என்று கேட்கிறான். ஏனென்றால் இந்தப் பகுதி முழுக்க எல்லாமே அவன் இடங்கள் ஆகிவிட்டது. எங்கள் இடம் மட்டும்தான் பாக்கி இருக்கிறது. நாங்கள் கொடுக்கவில்லை. அது மட்டுமல்ல நம் தமிழ் நாட்டில் பல குற்றச் செயல்கள் செய்வதும் அவர்கள்தான். இந்திக்காரன் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று பல குற்றச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறான். கொத்தனார் வேலை செய்பவர்கள் போல் சாதாரணமாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பான். யாராவது பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் விடுவான். இப்படி ஏராளம் செய்து கொண்டிருக்கிறான். நாம் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டைத் திறந்து போட்டுக்கொண்டு தூங்கக் கூடாது மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் “என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இன்று நாடே தேர்தல், கூட்டணி என்று பரபரப்பாக இருக்கின்ற நேரம் இது. இந்த நேரத்தில் இந்தப் பட விழா நடக்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருப்பதாகச் சொன்னார். அவர் விருப்பப்பட்டு வரவில்லை.வேறு வழியில்லாமல் வந்திருப்பதாகத் தனது சூழ்நிலையைக் கூறினார். இன்று ஆளாளுக்கு கதாநாயகன் ஆகவேண்டும் என்று ஆசையில் வருகிறார்கள். ஆசைப்படுபவர்கள் எல்லாம் கதாநாயகனாக முடியாது. ஆசைப்பட்டால் மட்டும் போதாது.

முன்பு குறும்படத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார்கள். இப்போது டிக்டாக்கில் இருந்து சினிமாவுக்கு வருகிறார்கள். இது ஒரு கால மாற்றம் தான். இலக்கியா டிக்டாக்கில் இருந்து வந்திருக்கிறார்.

நாம் விதவிதமான உடைகள் உடுத்துகிறோம். ஆனால் எல்லாம் மானத்தை மறைப்பதற்காகத்தான். அது போல பல வகையான படங்கள் எடுத்தாலும் சினிமா என்பது பொழுதுபோக்கிற்காகத் தான். அது காதலைச் சொல்லலாம், நகைச்சுவையைச் சொல்லலாம், அரசியல் பேசலாம், நல்ல கருத்துகளைச் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் சினிமா பொழுதுபோக்கிற்காகத்தான். அதுபோல சினிமாவில் கவர்ச்சியும் ஓர் அங்கம். இந்தப் படத்தின் கவர்ச்சி வியாபாரத்துக்காக என்று புரிந்து கொள்ள முடிகிறது. என்று திரையரங்கில் வர வேண்டிய படம் ஓடிடியில் வெளியானதோ அன்றே சினிமா முழுக்க முழுக்க வியாபாரம் என்றாகிவிட்டது.

இவர் சினிமா தெரியாமல் படமெடுக்க வந்தாலும் இப்போது அனுபவத்தில் கற்றுக் கொண்டு இருப்பார். ஆனால் இன்றைக்கு சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாமல்தான் 90 சதவீதம் பேர் சினிமா எடுக்க வருகிறார்கள். அவர்களுக்குச் சினிமா தெரியாது. அப்படிப்பட்டவர்கள் தான் இன்று படம் எடுக்கிறார்கள்.

சினிமா பொழுதுபோக்காக இருக்க வேண்டும். அரசியலில் பொறுப்புடன் இருக்க வேண்டும். இன்று பொழுதுபோக்கு நிறைந்த சினிமாவில் பொறுப்பு வந்துவிட்டது. இன்று அரசியல் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. ஆனால் நாம் பொறுப்பாக இருப்போம். இந்த ஏப்ரல் 6 -இல் தேர்தல் வருகிறது. எனவே நாம் பொறுப்பாக இருந்து நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். தமிழ் நாட்டைக் காப்பாற்றுவோம்” என்றார்.

விழாவில் படத்தின் இயக்குநர் துரைராஜ், தயாரிப்பாளர் கே. ராஜன், ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் பி.வி. கதிரவன், ஒளிப்பதிவாளர் செல்வகணேஷ், இசையமைப்பாளர் துரைராஜன், பாடகர் கானா சேது, பாடலாசிரியர் லோகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.