Search

“வில்லனாக நடிக்க ஆசை” – அசோக் செல்வன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து,  வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோகத் தளங்களில் அவரது படங்களுக்குத் தனித்த மதிப்பு இருக்கிறது.

‘ஓ மை கடவுளே’, ‘மன்மத லீலை’ என வெற்றிப்படங்களைத் தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பில் அவர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து, ஜாலியான உரையாடலை நிகழ்த்தினார்.

அசோக் செல்வன், “நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவன். நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சினிமாவுக்கு வரும் எல்லோருமே கஷ்டப்பட்டுத்தான் வருகிறார்கள். அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. ஆனால் எனக்கு பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தந்த ஆதரவும் அன்பும் மிகப் பெரியது. உங்களது விமர்சனங்களும் கருத்துக்களும் தான் என்னைச் செதுக்கியது. என்னுடைய குரு நீங்கள் தான். உங்கள் கருத்துக்களின் படிதான் என் ஒவ்வொரு படத்தையும் தீர்மானிக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்படியான படம் செய்ய வேண்டும். அதுவே என் விருப்பம். ஃபேமிலி படம் மட்டும் பண்றேன் என்ற இமேஜில் மாட்ட விரும்பவில்லை. ஒரு நடிகராக எல்லா விதமான கேரக்டர்ஸும் பண்ணவேண்டுமென ஆசைப்படுகிறேன். மோகன்லால் சாரின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தில் வில்லனாக நடிச்சிருக்கேன். இன்னும் நிறைய வில்லன் கேரக்டரில் நடிக்க ஆசைப்படுறேன்.

ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படித்தான் என் படங்களைத் தேர்ந்தெடுக்கிறேன். நித்தம் ஒரு வானம் படமே மூன்று பாத்திரங்கள் என்று நினைத்து தான் செய்தேன். இப்போது அதற்கு வரும் பாராட்டுக்கள் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் நிறைய படங்கள் செய்யவுள்ளேன்.

கொங்கு ஸ்லாங்கில் பேசி நடிக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை. நித்தம் ஒரு வானம் படத்தில் பிரபா கதாபாத்திரம் மூலம் அது நிறைவேறியது. எங்கம்மா கொங்கு பகுதியைச் சேர்ந்தவர். ஆனால் நான் இங்கேயே வளர்ந்த பக்கா சென்னைப் பையன். சேலஞ்சா எடுத்து ஓவராகப் போகாமல் இயல்பாகப் பேசி நடிக்க வேண்டுமென நினைத்தேன். இயக்குநரும் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தக் கதாபாத்திரம் செய்ய அது ஹெல்ப்பாக இருந்தது. ஒரு கிராமத்து இளைஞனாக நடிக்க வேண்டுமென்பது எனக்கு ரொம்ப நாள் ஆசை.

எனக்குக் கல்யாணம், அடுத்த வருஷம் நடக்கலாம், அதுக்கும் அடுத்த வருஷம் இருக்கலாம், அதுக்கும் அடுத்த வருஷமா இருக்கலாம். ஆனால் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட் ஆகாது. ஏனெனில், நான் வேலையில் ஈடுபட்டுவிட்டால் என் முழுக் கவனமும் அதில்தான் இருக்கும். என் நண்பர்கள் ஃபோன் செய்தால் கூட என்னைத் தொடர்பு கொள்ளா முடியாது. என்னோட இந்த வொர்க் பேட்டர்னைப் புரிந்து கொள்ள, அரேஞ்சட் மேரேஜில் பார்க்கும் பெண்ணால் முடியுமா என எனக்கு சந்தேகமா இருக்கு.

அடுத்ததாக, சரத்குமார் சாருடன் இணைந்து ஒரு த்ரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியாகும். எனக்கு எப்போதும் போல் உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி” என்றார்.