

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம் நடித்துள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ குறித்த தகவல்களைப் பகிரும் வகையில் கலகலப்பான முறையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன் சந்தானம், திரைப்படத்தை வெளியிடும் நடிகர் ஆர்யா, இயக்குநர் பிரேம் ஆனந்த் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பிரேம் ஆனந்த், “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற திருக்குறளுக்கு உதாரணமாக திகழ்பவர்கள் சந்தானம் மற்றும் ஆர்யா. அந்த நட்புதான் எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறது. இவ்வளவு பிரம்மாண்டமான இப்படத்தைத் தொடங்கும் போது நான் சந்தானத்திடம், ‘முதலாளி கண்டிப்பா நான் பயங்கர ஹார்டு வொர்க் பண்ணி இந்தப் படத்தை சக்சஸ் பண்ணி உங்களுக்கும் ஆர்யா சாருக்கும் சிலை வைப்பேன்’ என்று கூறினேன். அதன் பின்னர் படத்தின் ஷூட்டிங் பெரிய பெரிய லொகேஷன், க்ரூஸ் என்று நல்லபடியா போனது. பின்னர் போஸ்ட் ப்ரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிந்து படம் முழுமையாக எப்போது தயாராகும் என்ற கேள்வி வந்தபோது, சந்தானம் என்னை அழைத்து, ‘நீ எங்களுக்கு சிலை வைக்கலன்னாலும் பரவாயில்லை. எங்க ஃப்ரெண்ட்ஷிப்புக்கு உலை வச்சிராத. சீக்கிரம் படத்தை முடிச்சுக் கொடுத்துடு” என்று சொன்னார். ஆர்யா சார், படம் இப்போது முழுவதும் வெளியீட்டுக்குத் தயார் நிலையில் உள்ளது.
இது ஒரு சராசரி ஹாரர் படம் கிடையாது. இதற்குள் ஒரு ஃபேண்டஸி உலகமே உள்ளது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் சவாலாக இருந்தன. இப்படம் அனைவருக்குமான சம்மர் ட்ரீட் ஆக இருக்கும். இப்படத்தை டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்வதை விட சந்தானத்தின் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்லலாம்” என்றார்.
நடிகர் ஆர்யா, ” ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் ஒரு நல்ல ஸ்டோரி இருக்கும். அதற்கான ரீஸனிங் இருக்கும், ஒரு பிளே இருக்கும், ஒரு கேம் இருக்கும். பிரேம் அதை ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா எடுத்துக் காமெடியை ரொம்ப அழகா எக்ஸிக்யூட் பண்ணி இருப்பாரு. அதே மாதிரி பிரேம் என்னிடம் வந்து ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ கான்செப்ட் சொன்ன உடனே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. ஒரு படத்துக்குள்ளயே கேரக்டர்ஸ் டிரான்ஸ்போர்ட் ஆயிடுறாங்க. இப்படத்தைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகத்திற்கும் நாங்கள் இணைவோம் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
சந்தானம், “ஒரு நாள் ஆர்யாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “நீ காமெடியெனா இருக்கும்போது ஜாலியா இருப்ப. இப்பல்லாம் அந்த ஃபன் இல்லையே. ஏன்?” என்று கேட்டார். அதற்கு நான் நாயகனாக இருக்கும் சவால்கள் குறித்தும், இன்னும் சில சிக்கல்கள் பற்றியும் அவரிடம் சொன்னேன். அப்போது அவர், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தில் நீ முழுவதுமாக இறங்கி வேலை செய். உன் மொத்த கிரியேட்டிவிட்டியையும் காட்டு. உன் பிரச்சனை எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்’ என்றார். அப்படித்தான் இந்தப் படத்தை ஆரம்பித்து முடித்துள்ளோம். ஒரு நல்ல கதை, திரைக்கதை, காமெடி, ஆக்டிங் என எல்லாமே இதில் நிச்சயமாக உங்களைத் திருப்திப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
இயக்குநர் பிரேம் ஆனந்தைத் தமிழ்த்திரை உலகின் கிறிஸ்டோபர் நோலன் என்று நான் சொல்லுவேன். ஏனென்றால் ஆனந்த் பண்ற கதை எல்லாம் ஒரு லைனில் இருக்கவே இருக்காது. பல லேயர்களைக் கொண்டிருக்கும். கஷ்டமான விஷயங்களை அவ்வளவு எளிதாகச் சுவாரசியமாக ஒன்றாகக் கோர்த்திருப்பார். அது எப்படி என்று நமக்குப் புரியவே புரியாது. அதுதான் பிரேம் ஆனந்த். அருமையான காமெடி ட்ரீட்டாக இப்படம் ரசிகர்களுக்கு அமையும்” என்றார்.


