
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சமகால அரசியலை நகைச்சுவையாகச் சொல்லியுள்ள இந்தத் திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஈ. ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.
இயக்குநர் சாய் ராஜகோபால், ”இந்தத் திரைப்படத்தில் 35 நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக குறைவான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு நடித்தார்கள். அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் உருவான விதம் ஆச்சரியமானது. அதனை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நடிப்பில் தயாராகும் ‘தேவர் ஹோட்டல்’ என்ற படத்திற்கான கதை விவாதத்திற்காகத்தான் அவருடைய அலுவலகத்திற்குச் சென்று ஒரு வருடமாகத் திரைக்கதையைத் தயார் செய்து கொண்டிருந்தோம். திடீரென்று எதிர்பாராத விதமாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அங்கு வருகை தந்தார்.
என் மனைவி உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடன் எப்போதும் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்ற நிலை. அந்தத் தருணத்தில் என்னுடைய மகனின் நண்பரான கோவை லட்சுமி ராஜன் எனக்கு அறிமுகமானார். அவருக்கு பெங்களூருவில் உள்ள தயாரிப்பாளர் ரவி ராஜா நண்பர்.
கொரோனா காலகட்டத்தின் போது நான் வீட்டில் இருந்தே நகைச்சுவைக் காட்சிகளை எழுதி அதனை யூடியூபில் பதிவேற்றிக் கொண்டிருந்தேன். அந்தத் தருணத்திலும் அண்ணன் கவுண்டமணி என்னிடம் ஃபோனில் தொடர்பு கொண்டு பேசுவார்.
அந்த நேரத்தில் நேரத்தை வீணடிக்காமல் இரண்டு திரைக்கதைகளை எழுதி இருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அப்போது உடனே ‘எங்கே ஒரு கதையைச் சொல்லு கேட்போம்’ என்றார். ஃபோனிலேயே கதையை சொல்லத் தொடங்கினேன். ‘மூணு பொண்ணு, அந்த மூணு பொண்ணுங்களையும் அண்ணன் தம்பிக்குத்தான் கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு அப்பாம்மா நினைக்கிறாங்க. ஆனா அந்த மூணு பொண்ணுங்களும் ஏதோ ஒரு சூழ்நிலைல வேற வேற பசங்கள லவ் பண்றாங்க. அவங்க கல்யாணம் பண்ணிட்டாங்களா, இல்லையா? அந்த அப்பா கேரக்டர் அந்த மூன்று பசங்களுக்கும் கல்யாணத்தைப் பண்ணி வச்சாரா இல்லையா? இதுதான் கதை’ என்றேன்.
கேட்டவுடன், ‘நன்றாக இருக்கிறது. குடும்பங்கள் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கிறது. இதை நான் செய்தால் நன்றாக இருக்கும்’ என்றார். உடனே நானும் ‘உங்களுக்காகத்தான் எழுதினேன்’ என்று ஒரு பொய்யைச் சொன்னேன். உடனே அவர், ‘நான் இதுவரை அப்பாவாக நடித்ததில்லையே..!’ என்றார். உடனே மூணு தங்கச்சி என்று மாற்றினேன். ஓகே சொன்னார். ‘கொரோனா முடிந்தவுடன் நீயும் தயாரிப்பாளரைத் தேடு, நானும் தயாரிப்பாளரைத் தேடுகிறேன்’ என்றார்.
கொரோனா முடிந்தவுடன் கோவை லட்சுமி ராஜனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் மூலமாக தயாரிப்பாளர் ரவி ராஜாவின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. அதன் பிறகு நாங்கள் மூன்று பேரும் கவுண்டமணியைச் சந்தித்தோம். அதன் பிறகு அவர்களை சிங்கமுத்துவின் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கதையைச் சொன்னேன்.
அந்தத் தருணத்தில் என் மனைவியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. மனதில் சஞ்சலம் ஏற்பட்டது. சினிமாவா, மனைவியா என இக்கட்டான சூழலில், ‘மனைவியைக் கடவுள் காப்பாற்றுவான். 30 ஆண்டு காலமாக சினிமா மீதிருந்த காதல் காரணமாக மருத்துவமனையில் அருகில் இருந்த ஒருவரிடம், ‘இரண்டு மணி நேரம் என் மனைவியைப் பாதுகாப்பாக உடனிருந்து கவனித்துக் கொள்ளுங்கள். நான் வந்து விடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு, கலை இயக்குநர் மகேசுடன் சிங்கமுத்துவின் அலுவலகத்திற்கு வந்து தயாரிப்பாளரைச் சந்தித்து கதையைச் சொன்னேன்.
அதன் பிறகு மருத்துவமனையில் இருந்த என்னுடைய மனைவி ஒரு வார காலத்திற்குப் பிறகு மறைந்துவிட்டார். இந்த தகவல் தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்தது. சற்று தாமதமாகத் தொடங்கலாம் என திட்டமிட்டிருந்த அவர்கள், என்னுடைய மன மாற்றத்திற்காக உடனடியாக படத்தின் பணிகளைத் தொடங்கினார்கள். அப்படித் தொடங்கியதுதான் இந்தப் படத்தின் பணிகள். தற்போது இந்த படம் நன்றாக வந்திருக்கிறது.
திரையுலகில் கவுண்டமணிக்காக நான் எழுபது படங்களில் எழுதி இருக்கிறேன். மற்ற நடிகர்களுக்காக 40 படங்களில் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். சினிமாவில் சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மனதைத் தளர விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். நிச்சயம் உங்கள் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு கிடைக்கும்.
எழுபது படங்களில் எழுதி இருந்தாலும் இந்தப் படத்தில் இயக்குநராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பினை வழங்கிய கவுண்டமணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நான்கு பாடல்கள், ஒரு பாடலுக்கு ஒரு நாள் என நான்கு நாட்களில் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்துவிட்டார் இசையமைப்பாளர் சித்தார்த். படத்தில் இரண்டு பாடல்களை நான் எழுதி இருக்கிறேன். இந்தப் படத்தின் வெற்றி விழாவை மதுரையில் நடத்த விரும்புகிறோம். அந்த விழாவைக் கொண்டாடுவது ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது” என்றார்.