
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சமகால அரசியலை நகைச்சுவையாகச் சொல்லியுள்ள இந்தத் திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஈ. ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.
இயக்குநர் கே.பாக்யராஜ், “மணியைப் பற்றி நிறைய விஷயம் சொல்லலாம். இருந்தாலும் அவரைப் பற்றி மணியான ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். இதுவரை மூன்று யுகம் கடந்து விட்டதாகச் சொல்வார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை இந்த யுகம் கவுண்டமணி யுகம். சினிமாவில் கவுண்டமணியின் யுகத்தை யாராலும் மறக்க முடியாது. மறுக்க முடியாது.
அவர் வாய்ப்புத் தேடும் காலகட்டங்களில் என் அறையில் உள்ள சோதிடப் புத்தகத்தை எடுத்துக் காண்பித்து வாசிக்கச் சொல்வார். அவரைப் பற்றி நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி ஊக்கமளிப்பேன். அதன் பிறகு எங்கள் இயக்குநரிடம் கடுமையாகப் போராடி, ‘இந்தப் படத்தில் மணிதான் நடிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டேன். ஒரு நாள் இரவு 12:30 மணிக்குத்தான் எங்கள் இயக்குநர் இவருக்கு ஓகே சொன்னார்.
அதன் பிறகு எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஆலயம்மன் கோயில் வாசலில் கற்பூரம் ஏற்றி, “உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது” என்று சொன்னேன். இந்த நிகழ்வுகள் எல்லாம் இன்றும் என் நினைவில் பசுமையாய் இருக்கிறது.
சுதாகர் நடித்த ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அவருடைய அறிமுக காட்சியில் வசனங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக யோசித்து, ‘எல்லாருக்கும் நேரம் வரும் தெரிஞ்சுக்கோ, அது நல்லவருக்கே நிலைச்சிருக்கும் புரிஞ்சுக்கோ, கல்லாருக்கும் செல்வம் வரும் தெரிஞ்சுக்கோ, அதைக் காப்பாற்ற தான் புத்தி இருக்கணும் தெரிஞ்சுக்கோ’ என எழுதினேன். அது அப்படியே கவுண்டமணிக்குத்தான் கச்சிதமாகப் பொருந்தும். அவர்தான் நல்லவராகவும் இருந்திருக்கிறார். வல்லவராகவும் இருந்திருக்கிறார். கிடைத்த வாய்ப்பை இறுகப் பற்றி புத்திசாலித்தனமாக முன்னேறியும் இருக்கிறார்.
கவுண்டமணி படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தவுடன் இன்று என்ன காட்சி, என்ன வசனம் என இதைத்தான் முதலில் பேசுவார். அதன் பிறகு காட்சிகளையும் வசனங்களையும் மேம்படுத்துவதற்காகச் சிந்தித்துக் கொண்டே இருப்பார். சினிமாவில் லயித்து இருப்பார்கள் என்று சொல்வார்களே, அது கவுண்டமணிக்குத்தான் பொருந்தும். அவருடன் நான் அறையில் இருந்தேன் என்பது பெருமிதமாக இருக்கிறது.
‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்பது கவுண்டமணியின் பிராண்ட். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவரை வைத்துத் தொடர்ந்து படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் சினிமா மீது வைத்திருக்கும் மரியாதைக்கும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் இந்தப் படம் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.
‘காமெடி கிங்’ கவுண்டமணி, ”அனைவரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தைப் பற்றி நிறைய பேசி விட்டார்கள். பிறகு நான் என்ன பேசுவது? தயாரிப்பாளர் ரவி ராஜா இந்தத் திரைப்படத்தைச் சிறந்த முறையில் தயாரித்திருக்கிறார். இணை தயாரிப்பாளர் கோவை லட்சுமி ராஜனும் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.
இந்தப் படம் குடும்பத்துடன் காண வேண்டிய படம். படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்திலுக்கும் நன்றி. இயக்குநர் பி. வாசுவிற்கும் நன்றி. என்னுடைய ரூம் மேட் பாக்யராஜுக்கும் நன்றி.
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ரசிகர்கள், வருகை தராமல் வீட்டில் இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் என அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’வைப் பாருங்கள். இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை நன்றாகப் பாருங்கள். இந்த ‘ஒத்த ஒட்டு முத்தையா’வைத் திரும்பத் திரும்பப் பாருங்கள். நான் திரும்பவும் சொல்கிறேன். ‘ஒத்த ஒட்டு முத்தையா’வைப் பாருங்கள். திரும்பத் திரும்பச் சொல்கிறேன். ‘ஒத்த ஓட்டு முத்தையா’வைப் பாருங்கள். திரும்பிப் பார்த்துவிட்டும் சொல்கிறேன். ‘ஒத்த ஓட்டு முத்தையா’வைப் பாருங்கள். பார்க்க மறந்து விடாதீர்கள். இந்த ‘ஒத்த ஒட்டு முத்தையா’வை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள். அது உங்கள் கடமை. அது உங்களுடைய பொறுப்பும்கூட. இத்துடன் எனது பேச்சை நிறைவு செய்து கொள்கிறேன். வணக்கம். நன்றி” என்றார்.