Shadow

ஜூலை காற்றில் – காதலைப் பற்றிய படம்

July-Kaatril-audio-launch

காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குநர் கே.சி.சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குநர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை கஸ்தூரியின் துணிச்சல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது பேச்சுக்களை யூடியூப் சேனலில் பார்த்து வியந்திருக்கிறேன். படையப்பாவில் நீலாம்பரி ரசிக்கப்பட்டதற்கு அந்தப் பெண்ணிடம் இருந்த துணிச்சலே காரணம். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குறைவாக இருப்பதால் நடிகை கஸ்தூரி அவர்கள் ஒரு கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முக்கியமான காரணமாக மற்றொரு நண்பர் நாராயணன் அவர்கள் இங்கு வந்து இருக்கிறார்கள். நண்பர் நாராயணன் அவர்களின் தந்தையார் மிகப் பெரிய தயாரிப்பாளர். கை நிறைய காசு, கண்ணா நலமா, தாமரை நெஞ்சம், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர். எங்களுக்கு சினிமா ஆசையை விதைத்தவர் அவர். இயக்குநர் கே.சி.சுந்தரம் அவரைச் சிறிய வயதிலேயே தெரியும். தற்பொழுது ‘ஜூலை காற்றில்’ என்ற படத்தின் மூலம் காதலில் விளையாடியிருக்கிறார். இந்தப் படம் அவரது எண்ணத்தைப் போல வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

படத்தின் இயக்குநர் கே.சி.சுந்தரம் பேசுகையில், “நான் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, இயக்குநர் ஜீவாவிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். ‘காதல் படத்திலிருந்து இசை அமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் ரசிகன் ஆகிவிட்டேன். இந்தக் கதையை முதலில் அவரிடம் சொல்லிப் பாடலைக் கேட்டபோது, 5 அற்புதமான மெட்டுகளை அமைத்துக் கொடுத்தார். அவருடைய இசையில் காதல் ஆல்பம் ஹிட், கல்லூரி ஆல்பம் ஹிட், அவர் இசையமைத்தால் ஒன்றிரண்டு பாடல்கள்மட்டும் இல்லாமல் ஆல்பமாக ஹிட்டாகும். அதேபோல் இந்தப் படத்தின் ஆல்பம் ஹிட்டாகும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் டிமல் சேவியர் மும்பையில் வேறு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் இங்கு வர முடியவில்லை. படத்தின் நாயகிகளான சம்யுக்தா மேனன், அஞ்சு குரியன் ஆகிய இருவரும் வேறு வேறு படப்பிடிப்புகளில் இருப்பதால் அவர்களும் கலந்து கொள்ள முடியவில்லை. படத்தின் நாயகன் ஆனந்த் நாக், அவர்களுக்கு உடல் நலம் பூரணமாகக் குணமடையவில்லை. அதன் காரணமாக அவராலும் கலந்து கொள்ள இயலவில்லை. அத்துடன் இந்த விழா மிகக் குறுகிய கால ஏற்பாடாக அமைந்ததால் நிகழ்ந்திருக்கலாம்.

இந்தப் படம் காதல் படம் அல்ல. ஆனால் காதலைப் பற்றிய படம். இந்தப் படத்தின் திரைக்கதை இந்தியாவில் முதல் முறை என்று நான் உறுதியாகச் சொல்வேன். முதல் அத்தியாயம் நாயகனின் பார்வையில் இருக்கும். இரண்டாவது அத்தியாயம் முதல் நாயகியின் பார்வையில் அமைந்திருக்கும். மூன்றாவது அத்தியாயம் இரண்டாவது நாயகியின் கோணத்தில் அமைந்திருக்கும். ஒரு த்ரில்லர் பாணியில் ஒரே விஷயத்தை வெவ்வேறு கதாபாத்திரங்களின் ஊடாக, காதலில் சொல்லியிருப்பது ஜூலை காற்றில் படம் மட்டும் தான் என்பதே இதன் தனிச் சிறப்பு.

கார்த்தி சார், சூர்யா சார் இவர்களெல்லாம் என்னுடைய பால்யகால தோழர்கள். நான் கேட்டுக் கொண்டதற்காக படப்பிடிப்பு இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, இங்கு வருகை தந்திருக்கிறார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருந்தார். சில திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று காத்திருந்த போது, அவரது மறைவுச் செய்தி வெளியானது. அதன் பிறகு பாடலாசிரியர் சௌந்தர் என்பவரின் உதவியுடன் சில திருத்தங்களை மட்டும் மேற்கொண்டு பாடலை வெளியிட்டிருக்கிறோம். அதனால் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடைசியாக எழுதியது இந்தப் படத்திற்காகத்தான் என்பதையும் வருத்தமுடன் பதிவு செய்கிறேன்” என்றார்.

இந்த விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த தூத்துக்குடி சுப்ரமணியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை நடிகர் கார்த்தி வழங்கினார். இந்த நிதியினை உயிர் நீத்த சுப்ரமணியன் அவர்களின் சகோதரி சித்ரா அவர்கள் கார்த்தியிடமிருந்து பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த 44 வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஜுலைக்காற்றில் படக்குழுவின் சார்பில் தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்.

நடிகர் கார்த்தி பேசுகையில், “செல்ஃபி என்ற ஒரு விசயத்திற்கு மரியாதை இல்லாமல் செய்துவிட்டார்கள். பிரபலங்களிடம் செல்ஃபி எடுக்க வேண்டும் என்றால், முதலில் அவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகத்தை நாம் மறந்தே போய் விட்டோம். ஒவ்வொரு செல்ஃபோனிலும் தற்பொழுது முன் பக்கமும், பின் பக்கமும் ஃபிளாஷ் இருக்கிறது. அவ்வளவு லைட்ஸ் கண்களில் பட்டால், மைக்ரேன் இருப்பவர்கள் நிலையை யோசித்துப் பாருங்கள்! இது குறித்து யாரும் சிந்திப்பதில்லை.

இந்தப் படத்தின் இயக்குநர் சுந்தரம் என்னுடைய பால்யகால தோழர். என்னுடைய தந்தையார் சிறிய வயதில் இருக்கும் பொழுது எங்களை அதிகமாக வெளியே அழைத்துச் சென்றதில்லை. அழைத்துச் சென்ற இடம் கொடைக்கானலில் இருக்கும் சுந்தரம் அவர்களின் வீடுதான். அவர்களின் வீட்டுக்குச் செல்லும்பொழுது சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் அவர்களின் அரவணைப்பு.

இயக்குநர் சுந்தரம், இன்ஜினியரிங் முடித்துவிட்டு தான் சினிமாவுக்குள் வந்திருக்கிறார். தற்போதெல்லாம் இன்ஜினியரிங் முடித்து விட்டு சினிமாவுக்கு வருவது அதிகரித்து விட்டது. ஏனெனில் சினிமா அனைத்துத் தரப்பினரையும் உள்ளிழுத்துவிடுகிறது. சினிமா ஒரு போராட்டக் குணத்தை அனைவரது மனதில் விதைத்து விடும். அது பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்ல. அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதற்கு இது ஒரு வழி என்பதற்காக அனைவரும் சினிமாவிற்கு வருகிறார்கள். சந்தோஷப்படுவதைப் பார்ப்பதற்காகவே வருகிறார்கள்.

என்னைத் திரையுலகில் அடையாளப்படுத்திய பல பாடல்கள் எழுதியவர் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார். அவரும் இந்தப் படத்திற்குப் பாடல் எழுதி இருக்கிறார் என்பதால் அவருடைய ஆசீர்வாதமும் இந்தப் படத்தின் வெற்றிக்கு இருக்கும்.

தற்பொழுது நேர்மையான விஷயங்கள் பேசப்படுவது விட எதிர்மறையான விஷயங்கள் பேசப்படுவது தான் ஹைலைட் ஆகிவிட்டது. நாயகன் நாயகி வராத ஜுலைக்காற்றில் என்ற படத்தின் இசையை நடிகர் கார்த்தி வெளியிட்டார் என்று தான் செய்தி வெளியாகும். பொதுவாக ஒரு இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தைப் பற்றிய விஷயங்கள் பேசப்படுவது விட, வேறு விஷயங்கள் தான் ஹைலைட்டாகப் பேசப்படும். இந்தப் படத்தின் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய முயற்சிகளுக்காக வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.