Shadow

“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்

raj-kiran-condemns

ராஜ்கிரண் என்றழைக்கபடும் J. மொஹைதீன் அப்துல் காதர், ‘கறுப்பர் கூட்டம்’ யூ-ட்யூப் சேனல் வெளியிட்ட கந்த சஷ்டி கவசம் குறித்த ஆபாசமான காணொளியைக் கண்டித்துள்ளார்.

“ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம்.

முருகப்பெருமானை நம்புவோர்க்கு, “கந்தர் சஷ்டி கவசம்” என்பது ஒரு பாதுகாப்பு அரண். இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன.

இறைவனை நம்பாதோர்க்கு, ‘நம்பாமை’ என்பது அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, ‘நம்புதல்’ என்பது அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான் மேன்மையானது.

தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது மிகவும் கீழ்மையானது.

இந்தக் கொடிய கொரோனா காலகட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும்,
பொருளாதாரச் சீர்கேட்டோடும், உண்ண உணவின்றி கோடிக்கணக்கான நம் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில், யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம் இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது” எனக் காத்திரமாகத் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான ராஜ்கிரண்.