மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர்.
ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாகத் தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் பேசிய தயாரிப்பாளர் B.ஜெகதீஸ், “நம் மெட்ராஸின் அடையாளம் எல்லா ஊர்க்காரரும் இங்கு இருப்போம். எல்லா ஊர்க்காரரும் வேலை பார்ப்போம். அதே போல் இந்த மெட்ராஸ்காரனில் எல்லாமே இருக்கிறது. எந்த ஒரு தயாரிப்பாளரும் முழுக் கதை கேட்டுத் தான் ஒகே செய்வார்கள். ஆனால் நான் பாதி கதை கேட்டபோதே, படத்தை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டேன். இயக்குநர் மீது இருந்த நம்பிக்கை தான் காரணம். படம் பார்த்து விட்டேன் திருப்தியாக இருக்கிறது. ஷேன் அவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்துள்ளார். ஷேன் நிகாம் படப்பிடிப்பிற்கு எப்போதும் சீக்கிரம் வந்து விடுவார், இப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார், அவருக்குத் தமிழில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. மெட்ராஸ் அன்பு பாத்திரத்திற்குப் பிறகு, இந்தப்படத்தில் துரை சிங்கமாகக் கலையரசன் கலக்கியுள்ளார்” என்றார்.
இயக்குநர் வாலி மோகன் தாஸ், “என் ப்ரொடியூசர் முதலாளி ஜெகதீஸ், இந்தப்படம் ஆரம்பமாக, காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தா இருவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து கதையை முழுதாகக் கூடக் கேட்காமல் தயாரித்தார். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
நடிகர் ஷேன் நிகம், “அன்புள்ள மனிதர்களுக்கு வணக்கம். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனது நிறைவாக இருக்கிறது. வாலி ப்ரோ, ஜெகதீஸ் ப்ரோ இருவருக்கும் நன்றி. என் மீதே, எனக்கே சந்தேகம் இருந்தபோது, வாலியும் ஜெகதீஸும் என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தை உருவாக்கியுள்ளனர். என் பட டீசரை வெளியிட்ட நடிகர் எஸ்டிஆருக்கு நன்றி” என்றார்.
நடிகர் கலையரசன், “நான் மெட்ராஸ்காரன். என் ஊர் மெட்ராஸ். ஆனால் இந்தப் படத்தில் புதுக்கோட்டை ஆளாக நடித்துள்ளேன். ஷேன் நிகாம் மிக அருமையான நடிகன், அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. வாலி அவர் முன்பு செய்த படத்தின் டீசர் காட்டினார். மேக்கிங் பிடித்திருந்தது. படத்தின் கதையும் பிடித்தது. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். படம் அருமையாக வந்துள்ளது. சின்ன படம், பெரிய படம் என்பதெல்லாம் முக்கியமில்லை, நல்ல படத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் மிக ஆதரவாக இருந்தார். கதையை நம்பி நல்ல படத்தை எடுத்துள்ளார்” என்றார்.
இசையமைப்பாளர் சாம் CS, “பணம் கொடுத்துப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு தரமான படைப்பைத் தர வேண்டும். நல்ல கதை வைத்து படம் செய்யும் இயக்குநருக்குக் கதை எழுதும்போது, இந்த மாதிரி நடிகர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். பெரிய ஹீரோ படம் என்றால் அவருக்கு என கதையை மாற்றி, சீன் மாற்றி, இறுதியாக நினைத்தது வராது. இந்த மாதிரி சின்ன படத்தில் அது நிகழாது. பெரிய ஹீரோ படம் நல்லாயில்லை என்றாலும், அது வைரலாகிறது. ஆனால் சின்ன படம் நல்லா இருந்தாலும் அது நிகழ்வதில்லை. ரசிகர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஷேன் உடன் மலையாளத்தில் வேலை பார்த்தாலும், தமிழில் வேலை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு படம் நன்றாக எடுக்கும் போது, எல்லோருடைய பங்களிப்பும் மிக நன்றாக வந்து விடும். இப்படம் மிகத் தரமான படைப்பாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். இளன் பாடல் மிக நன்றாக எழுதியுள்ளார். கல்யாணம் பற்றிய அருமையாக வந்துள்ளது” என்றார்.
நடிகர் பாண்டியன், “மெட்ராஸ்காரன் படத்தில் நான் ஒரு அப்பா கேரக்டர் செய்துள்ளேன். இயக்குநர்தான் என் ஃபெர்பார்மன்ஸ் பற்றிச் சொல்ல வேண்டும். என் மகன் இளன் இப்படத்தில் பாடல் எழுதியிருப்பது இப்போது தான் தெரியும். பாடல் அருமையாக உள்ளது. பாடல் தனியே, இசை தனியே எனக் கேட்க இனிமையாக உள்ளது” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா, “தமிழ் சினிமாவில் இது எனக்கு 11 ஆவது வருடம். பல தடைகளைத் தாண்டி எனக்கு இந்தப் படம் கிடைத்துள்ளது. பல படங்கள் நடித்துள்ளேன் ஆனால் சில படங்கள் வெளியாகவே இல்லை. வாலி மோகன் தாஸ் ஒரு முறை என்னிடம் கதை சொன்னார். மிக அருமையாக இருந்தது. அந்தப் படம் 5 நாளில் நின்று விட்டது. மிக அருமையான படம், தயாரிப்பாளர் ஜெகதீஸ் என்னோட ஃபிரண்ட், ஃபென்டாஸ்டிக் ஹியூமன் பீயிங், அவரிடம் எல்லாமும் சொல்வேன், வாலி பற்றிச் சொன்னேன். அப்படித்தான் இந்தப்படம் ஆரம்பித்தது. எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது. பிடிச்ச டைரக்டர், பிடிச்ச ப்ரொடியூசர். தமிழில் இந்த நல்ல படம் மூலம் நான் மீண்டும் வருவேன்” என்றார்.
நடிகர் சரண், “இந்தப் படத்தின் ஒருங்கிணைப்பாகவும் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறேன். இப்படத்தில் எல்லோருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள். நான் வாலி ப்ரோ, இருவரும் ரங்கோலி படம் முடித்த பிறகு, நிறைய பேசிக்கொண்டிருந்தோம். அவருக்குக் கல்யாணம் நடந்தது. அப்போது தான் இந்தக் கதையை எழுதினார். அப்போது இரண்டாவது பாகத்தை எப்படி முடிப்பது என விவாதித்துக் கொண்டிருந்தோம். ஆனால் தயாரிப்பாளர் இரண்டாம் பாகம் கேட்காமலே படத்தைத் தயாரிக்க ஒத்துக் கொண்டு செக் கொடுத்துவிட்டார். ஷேன் நிகம் ரங்கோலி படம் பார்த்து விட்டு இந்தப் படத்தை ஒத்துக் கொண்டார். இந்தப் படத்திற்காக அவர் கொடுத்த உழைப்பு பிரமிப்பானது. சாம் சிஎஸ் அவர் கையில் இந்தப் படத்தின் மூச்சு உள்ளது. படம் மிக அருமையாக வந்துள்ளது” என்றார்.
பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பைச் சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.