Search

“வடசென்னை நண்பர்களின் ரீயூனியன் – நண்பர் சரண் | மாயவலை

அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘மாயவலை’ ஆகும். சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’ திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளார். சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

நடிகர் வின்சென்ட் அசோகன், “அமீர் அண்ணனைச் சந்தித்ததே பெரிய விஷ‌யம். அவருக்கு சினிமா மேல் இருக்கும் காதல் தான் எங்கள் இருவருக்கும் பொதுவானது. அவர் என்னை எப்போதும் மதிப்பவர். வெற்றிமாறன் சாரின் ‘வட சென்னை’ படத்தில் அமீர் அண்ணனுடன் நடித்தது அனைவருக்கும் இன்றும் பிடித்த காட்சியாக உள்ளது. அமீர் அன்ணணுடன் இப்போது வரை நடித்தது எல்லாமே அடிதடி காட்சி தான். இந்தப் படம் வித்தியாசமானதாக அமைந்தது. வெற்றிமாறன் இப்படத்திற்குள் வந்தது மகிழ்ச்சி” என்றார்.

தயாரிப்பாளர் ஜாஃபர், “அமீர் அண்ணனுடன் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது இந்தப் படம் ஆரம்பித்தது. அமீர் அண்ணன் வாழ்க்கையிலேயே ஆரம்பித்த 40 நாட்களில் ஷூட்டிங் முடித்த படம் இது மட்டும் தான். அடுத்து அவர் இயக்கும் படமும் எங்களுடையது தான். எங்கள் உரையாடல் எப்போதும் கலகலப்பாக‌ இருக்கும். சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்போம்” என்றார்.

நடிகர் சரண், “எல்லோர் மத்தியில் இந்த மேடையைப் பகிர்வது பெருமை. என் முதல் நன்றி வெற்றிமாறன் சாருக்கு தான். ‘வட சென்னை’ படம் தான் என் வாழ்க்கையை மாற்றியது. என்னை காஸ்ட் செய்யும் அனைவரும் ‘வட சென்னை’ பற்றிச் சொல்வார்கள். அந்த‌ வாய்ப்பு தந்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. ‘வட சென்னை’யில் பார்த்த பல நண்பர்களின் ரீயூனியன் மாதிரி இந்தப் படம் இருந்தது. இந்தப் படத்தில் வாய்ப்பு தந்ததற்கு ரமேஷ் அண்ணாவிற்கு நன்றி” என்றார்.

நடிகை சஞ்சிதா ஷெட்டி, “சமுத்திரக்கனி சார் தான், ‘விநோதய சித்தம்’ பார்த்து அமீர் சார் கூப்பிடுகிறார், போய்ப்பார் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படம் கோவிட் காலத்தில் உருவானது. என்னை மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். மிக போல்டாக நடித்திருக்கிறேன், பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். ஆர்யாவின் தம்பி சத்யா என்னுடன் இணைந்து நடித்திருக்கிறார். மிக அழகாக நடித்துள்ளார். அமீர் சாருடன் இணைந்து நடிக்கும் போது நிறையக் கற்றுக் கொள்ள முடிந்தது. அவரும் மிக அற்புதமாக நடித்துள்ளார். ராம்ஜி எங்கள் எல்லோரையும் நன்றாகக் காட்டியுள்ளார். வெற்றிமாறன் சாருக்கு நன்றி. அவர் இந்தப்படத்தில் இணைந்தது பெருமை” என்றார்.

பாடலாசிரியர் சினேகன், “நானும் அமீர் சாரும் இணைந்து பணிபுரிந்து பல நாட்கள் ஆகி விட்டது. நாங்கள் இணைந்த அனைத்துப் பாடல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன‌. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். எங்கள் படம் என்பதற்காக சொல்லவில்லை, இப்படம் பெரிய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அமீர் சார் இந்தப் படத்தில் அழகாய் நடித்தது மட்டுமில்லாமல் மிக அழகாகவும் இருக்கிறார். பல ஆண்டுகள் அவருடன் பணியாற்றி வருகிறேன். இந்த பந்தம் மென்மேலும் தொடரும் என்று நம்புகிறேன். இயக்குநர் வெற்றிமாறன் இங்கு இணைந்துள்ளது எங்களுக்கு ஒரு மிகப் பெரிய பலம். அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு மிக முக்கியம். இந்தப் படம் மக்களிடையே ஒரு ஆழமான விதையை விதைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் சத்யா, “இடையில் எனக்குப் பெரிய பிரேக். நடுவில் ‘சந்தனதேவன்’ படத்தின் நடித்தேன். அதுவும் இடையில் நின்றுவிட்டது. என்ன செய்வது என்று தெரியாத போது தினமும் அமீர் சார் ஆபிஸ் போய்விடுவேன். பின் அவர் ரமேஷ் சாரிடம் எனக்கு இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். இது என் ஆரம்பமாக இருக்குமென்று நம்புகிறேன்” என்றார்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி, “தாழ்வு மனப்பான்மை யாரிடமும் இருக்கக் கூடாது. உங்கள் திறமை பேசட்டும், பேசும். அமீர் நடிப்பிற்கு எப்போதும் எதிரி நான் தான். ஒரு நல்ல இயக்குநர் நடிக்கக்கூடாது என்றேன், ஆனால் வெற்றிமாறன் ‘வட சென்னை’ மூலம் மாற்றிவிட்டார். இந்தப் படத்திலும் அமீர் அருமையாக நடித்துள்ளார். வெற்றிமாறனுக்கு ஒரு வேண்டுகோள், நீங்கள் நடிக்கப் போய்விடாதீர்கள்” என்றார்.