Shadow

“படத்தில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளேன்” – ஹரஹர மஹாதேவகி இயக்குநர்

Iruttu araiyil muruttu kuththu

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ஹாரர் காமெடி வகை சேர்ந்த படம் என்பதாலும், ஹர ஹர மஹாதேவகி இயக்குநர் சன்தோஷ் P. ஜெயக்குமார் இயக்கியுள்ளதாலும், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் உள்ளது.

படத்தின் இயக்குநர் சன்தோஷ் P. ஜெயக்குமார் பேசுகையில், “நான் இயக்கும் இரண்டாவது படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறார்? கருத்துச் சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்துத் திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜானர். உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. இந்தப் படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாகப் பார்த்தால் பொழுது போக்கு படமாக மட்டுமே தெரியும். அப்படித்தான் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நான் பணியாற்றும் இரண்டாவது படம். இந்தப் படத்திற்காக நான் என்ன கதை அவரிடம் சொன்னேன் என்று எனக்கு தெரியவில்லை. அவர் என்ன கதை கேட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று தான் கதையை விவாதித்து காட்சிகளையும் வசனங்களையும் எழுதினோம். இந்தப் படத்தில் வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். இதில் நடிகை சந்திரிகா ரவி பேயாக நடித்திருக்கிறார். அவர் படப்பிடிப்பின் போது இருபதடி உயரத்தில் கயிறு கட்டி தொங்கியப்படி நடித்துக் கொடுத்தார். அவருக்கு மேக்கப் போட ஒன்றரை மணி நேரம் ஆகும். இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். தயாரிப்பாளர் என்னிடம் கதை கேட்கவில்லை. நான் சொன்ன பட்ஜெட்டிற்கு ஒப்புக்கொண்டு, எந்த வித தலையீடும் இல்லாமல் முழுச் சுதந்திரம் கொடுத்தார். அதனால் தான் 23 நாட்களுள் படபிடிப்பை நடத்தி முடித்தோம்” என்றார்.

நடிகர் கௌதம் கார்த்திக் பேசுகையில், “இந்தப் படத்தில் என்னுடன் ஒரு பாடலுக்கு நடிகர் ஆர்யா நடனமாடியிருக்கிறார். இதற்காக அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். எனக்கு அவருடன் இணைந்து நடனமாட ஆசையிருந்தது. அந்த ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது. இந்தப் படம் முழு நீள பொழுதுபோக்கு படம் தான். நடிகைகளுக்கும் நன்றி சொல்கிறேன். ஏனெனில் அடல்ட் ஹாரர் காமெடி படம் என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக்கொண்ட அவர்களின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்” என்றார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து மே 4 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

“நாட்டில் ஏற்கெனவே கற்பழிப்புகள் அதிகமா நடக்குது. இப்படிலாம் படம் எடுத்தால், இதனால் ஏற்படும் கற்பழிப்புகளுக்கு நீங்களோ கெளதம் கார்த்திக்கோ பொறுப்பெடுத்தீப்பீங்களா?”

“நல்ல கேள்வி. இதுக்குத்தான் படத்தில், ‘சொந்த கையில் சொர்க்கம் காணுவோம்’னு ஒரு மெஸ்சேஜ் வச்சிருக்கேன். அப்படிச் செய்தால் கண்டிப்பாகக் கற்பழிப்புகள் குறையும்” என்று ஒரு போடு போட்டார் இயக்குநர் சன்தோஷ்.

“இருட்டு அறையில் முரட்டு குத்து என்றால் என்ன அர்த்தம்?”

“இது ஒரு பேய்ப் படம். பேய் இருட்டுல தான இருக்கும். அப்படி இருட்டு அறையில் மாட்டினவர்களை முரட்டுத்தனமாகப் போட்டுத் தாக்கிடும்.”