
நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே! அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சாந்தினிக்குத் தனி இடம் உண்டு. ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு.
‘சித்து +2’ -இல் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது.
இவரது நடிப்பைக் கண்டு வியந்த பாலாஜி சக்திவேல், இவரை அணுகி ஒரு கதை சொல்ல, அந்தக் கதை சாந்தினிக்கு மிகவும் பிடித்து விட, உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அந்தப் படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. மேலும் மென்மையான உணர்வுகளை அழகான திரைப்படமாக்கும் ராதாமோகன் சாந்தினியின் நடிப்புத் திறனைக் கவனித்து, தனது புதிய படத்தில் நடிக்க அழைத்துள்ளார். எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாந்தினி கதாநாயகியாக நடிக்கிறார். சாந்தினியின் படங்கள் வரிசையில் இந்தப் படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு புறம் பாலாஜி சக்திவேல் படம், மறுபுறம் ராதாமோகன் படம் என சாந்தினியின் வரிசையான படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. ராதாமோகனின் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக சாந்தினி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய படங்கள் தனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாக இருக்கும் என மகிழ்ச்சியில் இருக்கிறார் சாந்தினி.