
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகத் தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தைப் பார்வையிட்டனர். பரபரப்பான சூழ்நிலையும், நேரடியாக இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கும் கூட்டமும் அங்கு இருக்க, மகிழ்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அவர்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறினார்.
அவருடைய இந்தத் தன்னிச்சையான முடிவிற்கு அங்குக் கூடியிருந்த ரசிகர்களிடத்தில் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. அவரும் மேடை ஏறி பாடல்களைப் பாடினார். மேலும் அதனை ஒரு மறக்க இயலாத மாலை நேரமாக மாற்றி அமைத்தார். அவர்களிடயே பேசும்போது, இந்த ஆண்டில் மேலும் சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.