Shadow

“சூரியை ஓட விட்ட அதிதி” – கார்த்தி | விருமன்

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’.

இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அச்சந்திப்பில் பேசிய விருமன் பட நாயகன் கார்த்தி, “இப்படத்தின் ட்ரைலர் வரும்வரை பதட்டமாகத்தான் இருந்தது. அயல் நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து நம் கலாச்சாரம் மாறி விட்டதோ? நமது மண் சார்ந்த படங்களுக்கு ஆதரவு இருக்காதோ? என்ற சந்தேகம் துவக்கத்தில் எங்களுக்குள் இருந்தது.

ஏனென்றால், தற்போது கிராமத்தில்கூட ஸ்விக்கி, ஸொமேட்டோ வந்துவிட்டது. ஆனால், இந்த ‘விருமன்’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வெற்றி பெற்றதும் அந்த எண்ணம் மாறிவிட்டது.

பருத்தி வீரன் பாணி கொம்பனில் வரக் கூடாது என்று நான் கவனமாக இருந்தேன். அதேபோல் கடைக்குட்டி சிங்கத்தில் 5 அக்காக்களுக்கு தம்பியாக இருக்க வேண்டும். முன் படத்தின் சாயல் வரக் கூடாது என்று எண்ணுவேன்.

கிராம வாழ்க்கைதான் அழகாக இருக்கிறது. அந்தக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும்போது சுகமாக இருக்கிறது. என் மாமனாருக்கு என்னுடன் பேச மிகவும் பிடிக்கும். ஆனால், எனது தோளைத் தொட்டுவிட்டு சென்று விடுவார். நானே வலிய சென்று அவரிடம் பேசுவேன். அவர் உலக அரசியல் வரைக்கும் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். எப்படி என்று கேட்டால், ‘எல்லாம் டீ கடையில் கேட்டதுதான்’ என்பார்.

ராஜ்கிரண் சார் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்று கூறியதும் எனக்குப் பெரும் நம்பிக்கை வந்துவிட்டது. ‘காசு வாங்காமல் நடிப்பேன்; ஆனால், சம்பளம் வாங்காமல் நடிக்க மாட்டேன்’ என்பார் பிரகாஷ் ராஜ் சார். கலைஞன் என்றால் பணத்தைப் பொருட்படுத்தாமல் நடிக்க வேண்டும் என்ற அழகான விஷயத்தைப் பிரகாஷ்ராஜ்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார்.

விடியற்காலை 3 மணிக்குத்தான் பாடல் காட்சிகளைப் பதிவு செய்தார்கள். சினேகனின் வரிகள் பாடலுக்கு அழகு சேர்த்துள்ளது. சூரி அண்ணனை நடிகர் என்றே எனக்குத் தோன்றாது. அவரே ஒரு குட்டி இயக்குநர் போலத்தான் இருப்பார். சிறு இடம் கிடைத்தாலும் அதில் பஞ்ச் வசனங்களை இயல்பாகப் பேசிவிடுவார். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனே ஓடிப் போய்விடுவார்.

கடைக்குட்டி சிங்கத்தில் அவருக்கும் எனக்குமான ஒரு காட்சியில் மழை பெய்து கொண்டிருந்தபோதும் அழுதுவிட்டார். அவரால் காமெடியும் செய்ய முடியும். குணச்சித்திர வேடத்திலும் நடிக்க முடியும்.

அதிதி இந்தப் படத்தில் புதுமுகமாகவே இல்லை. அனுபவசாலி போலவே நடிப்பிலும், நடனத்திலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதேபோல் அவர் நன்றாக மொக்கையும் போடுவார். படப்பிடிப்பின்போது கிடைத்த நேரத்தில், ‘நான் சில கேள்விகளைக் கேட்கிறேன் பதில் சொல்லுங்க’ என்று மொக்கை கேள்விகளைக் கேட்டு நம்மை பல்பு வாங்க வைத்தார்.

அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் சூரியிடம் பதில் கேட்டேன். அவரும் எனக்குத் தெரியாது என்று சொன்னதால் அதிதியே பதிலைச் சொன்னார். அந்தப் பதிலைக் கேட்டவுடன், ‘இனிமேல் நான் கேரவன்லேயே உக்காந்துக்கிறேன்.. இந்தப் பக்கமே வர மாட்டேன்..’ என்று சொல்லி ஓடிவிட்டார் சூரி.

ஏற்கனவே, இருக்கும் கிராமம் போன்ற அமைப்பில்லாமல் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று ஜாக்கியிடம் கேட்டுக் கொண்டோம். செல்வாவிடம், ‘எனக்கு க்ளோசப் வேண்டாம். அழகான கிராமங்கள் இருக்கும்போது ‘வைட்’ கோணத்தில் வைத்தே எடுங்கள்’ என்று கூறினேன். ‘அந்தக் கிராமத்தில் வாழ்வோர் அப்போதுதான் அதன் அழகைக் கண்டு ரசிப்பார்கள்’ என்று சொன்னேன்.

என் முதல் படம் வெற்றி என்ற வார்த்தையை என்னிடம் முதலில் கூறியது சக்திதான். ‘நகரத்தில் இருப்பவர்களின் கேளிக்கை வேறு. கிராமப் புறங்களில் இருப்பவர்களின் கேளிக்கை வேறு’ என்று உற்சாகமாக கூறுவார். அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் மாதிரி. மிகவும் உண்மையான மனிதர்.

2டி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்றுதான் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் வைத்தார்கள். ஆனால், அங்கிருந்த ரசிர்களின் விசில் சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 5 மணி நேரமும் உற்சாகமாக இருந்தார்கள்.

அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல. அதுவொரு நம்பிக்கை என்று சொல்லும் படம்தான் இது. எங்களுக்கு எதாவது ஒன்று என்றால் என் தங்கை பிருந்தா பக்கத்திலேயே இருப்பார். என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவருடைய தம்பி உடன் இருந்தார். அதன் காரணமாகத்தான் கந்தன் வேண்டும் என்று முடிவெடுத்தோம். அண்ணனையும், பிருந்தாவையும் கொடுத்த அப்பா, அம்மாவிற்கு நன்றி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது ஒரு அம்மா ஓடி வந்து, ‘இங்கிருக்கும் அரசுப் பள்ளியை வந்து பாருங்கள்’ என்று கூறினார். அங்கு சென்று பார்த்தால் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இப்போது எங்களுடைய ‘அகரம்’ அறக்கட்டளை சார்பாகவும், பலரும் செய்த உதவியாலும் அந்தப் பள்ளிக்கூடம் மாற்றப்பட்டு இப்போது சிறப்பாக இருக்கிறது. இது போன்று இடங்களில் இருந்து கேட்ட பிறகு உதவி செய்யாமல், தாமே முன் வந்து செய்ய வேண்டும். இப்படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.