
அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா 41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Waiting to be back on sets…!! #Suriya41 pic.twitter.com/enuJ5MNbZJ
— Suriya Sivakumar (@Suriya_offl) May 26, 2022
தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ்த் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான ‘நந்தா’, ‘பிதாமகன்’ என இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியைக் குவித்ததுடன், உலக அளவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களைப் பெரும் உற்சாகம் கொள்ள வைத்ததுடன், படம் மீது பெரும் ஆவலைத் தூண்டியது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிப் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், இப்படம் நிறுத்தப்படுவதாகப் படம் குறித்து சில தவறான தகவல்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக நடிகர் சூர்யா இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். கன்னியாகுமரியில் துவங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சிறு இடைவேளைக்குப் பிறகு, விரைவில் துவங்குமெனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை கண்டிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சூர்யா நடிக்க, ஜோடியாக டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.
இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள, ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கலை இயக்குநராக மாயப்பாண்டியும், படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யாவும் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மென்ட் சார்பில் ஜோதிகாவும் சூர்யாவும் தயாரிக்க, ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.


