கடைசி விவசாயி விமர்சனம்
பேச்சிலும் எழுத்திலும் முதல் இடத்தில் வைக்கப்படும் விவசாயிகள், அவர்களுக்கான தேவைகளின் போது கடைசி இடத்திலே வைக்கப்படுகிறார்கள். "உழவன் தான் உலகின் வேர்" என்று கவித்துவமாகச் சொன்னாலும் அவர்களின் பாடுகள் அப்படி இல்லை. கடைசி விவசாயி படத்தில் விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பிரச்சாரம் செய்ய வாய்ப்பிருந்தும், அதை மிக நுணுக்கமாகத் தவிர்த்து ஒரு 83 வயது விவசாயினுடைய வாழ்வைக் கண்முன்னே நிறுத்தி அசத்தி இருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.
உசிலம்பட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் குளிக்கவும் கணக்குப் பார்த்து செலவு செய்யும் கஞ்சர்கள் போல் தான் தண்ணீர் வருகிறது. வயல்கள் வறண்டு கிடக்கின்றன. 15 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் ஒரு யானையை வாங்கி அதை வைத்து ஜீவனம் நடத்துகிறது ஒரு குடும்பம். பலரும் நிலங்களை விற்றுவிட்டு குளத்து வேலைக்குச் சென்று கஞ்சி குடிக்கிறார்கள். இப்படியான ஊரில் ஒற்றை ஆள...