
ஆலன் என்பது சிவனின் நாமங்களில் ஒன்றாகும். காசியில் இருந்து கொண்டு தன்னை அறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தியாகுவைக் குறிக்கும் காரணப் பெயராக ஆலனைக் கொள்ளலாம். 3S பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு லோகோவே, சிவனின் ரூபங்களில் இருந்து சமஸ்கிருத ஓம் வடிவத்திற்கு மாறுகிறது.
இறைவனைத் தன்னுள் தேடும் முயற்சியில் இருக்கும் வெற்றி, அதில் தோற்றாலும், அவரது தாத்தா விதைக்கும் எழுத்துக் கனவு மட்டும் சுடர் விட்டு எழுகிறது. மக்களோடு மக்களாய் வாழ காசியினின்று கிளம்பும் தியாகு, இருத்தலையும் இருத்தலின்மையையும் மட்டும் ஞானமாகக் கொண்டு செல்கிறான். தனக்கு மிகவும் பிடித்த எழுத்தைக் கங்கையில் விட்டுவிடுகிறான்.
ஜெர்மனைச் சேர்ந்த ஜனனியை ட்ரெயினில் சந்திக்கிறான். அவளது விருப்பத்திற்கிணங்க, மீண்டும் எழுதத் தொடங்குகிறான் தியாகு. அந்த எழுத்து, தியாகுவை அவன் சந்திக்கத் தயங்கும் பால்யத்திற்கு அவனை இட்டுச் செல்வதே படத்தின் கதை.
கரை கொள்ளாமல் தளும்பி ஓடும் கங்கையைப் போல், பாவனைகளால் தளும்புகிறது படம். பள்ளிச் சிறுவனாக இருக்கும்போதே, நோட்டுப் புத்தகத்தில் அடித்தல் திருத்தலின்றிக் கதையெழுத வருகிறது தியாகுவிற்கு. வளர்ந்த பின், தியாகு, தான் எழுதும் தாள்களைக் கசக்கித் தூக்கிப் போட்டவண்ணம் உள்ளார். தமிழ் சினிமாவில், முதல் முறை காதல் கடிதம் எழுத முயலும் நாயகன் திருப்தி வராமல் தாள்களைக் கசக்கிப் போடும் க்ளிஷே காட்சியைப் பொக்கிஷமாகப் படத்தில் சேகரித்து வைத்துள்ளார் இயக்குநர். ஜடாமுடி நாயகனோ, நாயகியோ தனித்தனியாகவோ அல்லது இருவரும் ஒன்றாகவோ போனால், கிண்டல் செய்வதற்கோ, கையைப் பிடித்து இழுப்பதற்கோ ஒரு குடிகாரப் பட்டாளம் எப்பவும் தயாராக உள்ளது. ‘சண்டை வேணுமா, சண்டை இருக்கி’ என்பதற்காகப் பயன்பட்டுள்ளது (தமிழ்ச் சமூகம், புத்தகங்களில் மூழ்காமல் குடி வஸ்துகளில் தங்களைத் தொலைக்கின்றனர் என்ற உள்ளார்ந்த வருத்தத்தைத் தன் பேச்சில் வெளிப்படுத்தினார். ஆனால் அவை திரைக்கதையாக மாறும்போது மொன்னையான க்ளிஷே காட்சிகளாகப் பார்வையாளர்களை நோக்கிப் பாய்கிறது).
தியாகுவாக, நடிகர் வெற்றி வெளிப்படுத்தியுள்ள நடிப்பை, அவரது முதற்படத்துடன் இணை வைக்கலாம். ஜனனியாக மதுராவும், தாமரையாக அனுசித்தாராவும் நடித்துள்ளனர். மேன்ஷன் ஓனராக வரும் கருணாகரன் நிறைவாகத் தன் பாத்திரத்தைச் செய்துள்ளார். ஹரீஷ் பேராடியின் பாத்திரமும் பார்ப்பதற்கு நேர்த்தியாய் உள்ளது. ‘எழுத்தே ஆன்மிகம். அதை மக்களுடன் இருந்து செய்’ என நாயகனை அனுப்பி வைக்கிறார். நாயகன், அதற்குப் பொருள், துணை தேடி லெளலீக வாழ்க்கையில் ஈடுபடுவது எனப் புரிந்து கொள்கிறான் தியாகு. ஆன்மிக விசாரம், தத்துவ விசாரமோ இல்லாமல், ஏன் ஒரு எழுத்தாளனின் பயணமுமாகவும் இல்லாமல், சிறு வயதில் தொலைந்த ஆடு ஒன்று, தனக்கு ஒரு இணை கிடைத்து விடாதா என ஏங்கும் படமாக நீர்த்துப் போய்விடுகிறது.