

உள்ளங்கனி நெல்லிக்கனி போலிருந்த முதலமைச்சராகும் வாய்ப்பை எந்த முக சுளிப்புமில்லாமல் விட்டுக் கொடுக்கும் பண்பையெல்லாம் கதைகளில் மட்டுமே கேட்டிருக்கமுடியும். அந்தப் பண்பிற்குச் சொந்தக்காரரான ஆர்.எம்.வீ. (RMV) என்றறியப்படும் இராம. வீரப்பன் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, அவரது மகன் தங்கராஜ் தயாரிக்க, பின் சுப்பிரமணியம் இயக்கியுள்ளார். முப்பது மணி நேர ஃபூட்டேஜ்களைச் சுருக்கி 118 நிமிட ஆவணப்படமாகத் தொகுத்துள்ளனர். திராவிடச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, பத்திரிகையாளராக வாழ்வைத் தொடங்கித் தயாரிப்பாளராகப் பரிணமித்து, அரசியல்வாதியாக கோலேச்சிய அவரது நிறைவான வாழ்க்கையை நேர்த்தியாகக் கடத்தியுள்ளனர்.
இராம. வீரப்பனின் சினிமா பயணம் குறித்தும், அரசியல் வாழ்க்கை குறித்தும் பிரபலங்கள் வியந்தோதிப் பேசினர். உதாரணத்திற்கு, “தமிழ்நாட்டில் அறநிலைத்துறை என்றொரு துறை இருப்பதே, ஐயா ஆர்.எம்.வீரப்பன் அத்துறையின் அமைச்சரான பின்பு தான் பெரும்பான்மையோர்க்குத் தெரிய வந்தது” என்றார் தொல். திருமாவளவன். சத்யா மூவிஸின் பாட்ஷா படத்தில் வெற்றி விழாவில், தனது பேச்சால் எப்படி ஆர்.எம்.வீரப்பனுக்குப் பதவி பறிப் போனது என்பதைக் குற்றவுணர்வோடு பகிர்ந்து கொண்டார் திரு.ரஜினிகாந்த். கவிஞர் வாலி, சத்யராஜ், வைரமுத்து, சரத்குமார், முன்னாள் ஐ.நா. அதிகாரி ஆர். கண்ணன், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், ஜெகத்ரட்சகன், திருநாவுக்கரசு, கவிஞர் முத்துலிங்கம், இளையராஜா, சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம், இயக்குநர் SP. முத்துராமன், காஞ்சி சங்கராச்சியர் விஜயேந்திரர், தருமபுரி ஆதீன மாசில்லாமணி சுவாமிகள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இராம. வீரப்பன் குறித்த நினைவுகளோடு அவரது பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் எடுத்தியம்பியுள்ளனர். இராம.வீரப்பன் அவர்கள் குறித்த எம்ஜிஆர், கலைஞர் ஆகியோரது அசைவொளியையும் உபயோகப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டின் மகேந்திரகிரி அமைந்துள்ள இஸ்ரோ, ஸ்ரீரங்கத்தின் 13 அடுக்கு ராஜகோபுரம் புணரமைப்பு, கம்பன் கழகம், தமிழ்நாட்டு ஆழ்வார் கழகம், அமெரிக்காவில் இருந்து படுத்துக் கொண்டே எம்.ஜி.ஆர். பெற்ற வெற்றி போன்றவற்றிற்குப் பின்னுள்ள இராம.வீரப்பனின் உழைப்பையும் அறிவையும் அழுத்தமாகச் சிலாகிக்கப்பட்டு, அவரது ஆவணப்படத்திற்குக் கிங் மேக்கர் என்ற தலைப்புப் பொருத்தமானதே என்பதை நியாயப்படுத்துகிறது.


