Shadow

இயக்குநர் வ.கெளதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ ஆகிய படங்களையடுத்து வ.கௌதமன் இயக்கும் மூன்றாவது படமாகும். ‘மகிழ்ச்சி’யைத் தொடர்ந்து நாயகனாக அவருக்கு இது இரண்டாவது திரைப்படம்.

மண்ணையும் மக்களையும் காக்க வீரம், ஈரம், அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இப்படம். படையாண்ட மாவீரனுக்கு எதிராக மன்சூரலிகான், ‘ஆடுகளம்’ நரேன், ‘பாகுபலி’ பிரபாகர், ‘வேதாளம்’ கபீர், மதுசூதனராவ், தீனா என ஆறு பேர் மோதுகின்றனர்.

பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இப்படைப்பில் நெருப்பு தகிக்கும் நான்கு சண்டைக் காட்சிகளை ஸ்டன்ட் சில்வா வடிவமைக்க, நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் படையாண்ட மாவீராவில் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், தலைவாசல் விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடிக்கிறார். பேரழகான இசையை ஜிவி.பிரகாஷ் குமாரும், பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவினை வெற்றிவேல் மகேந்திரன், கோபி ஜெகதீஸ்வரன், கலையை மோகன், வசனத்தை பாலமுரளி வர்மன், படத்தொகுப்பை ராஜா முகமது, ஸ்டில்ஸினை அன்பு, மக்கள் தொடர்பினை நிகில் கவனிக்கின்றனர்.

இயக்குநர் வ.கௌதமன் “என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடுகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றைப் படைப்பாக்கி ஒரு தரிசனமாக இவ்வுலகிற்குத் தருவது மட்டுந்தான். சந்தனக்காட்டு மாவீரன் வீரப்பனைப் படைத்துவிட்டேன். முந்திரிக்காடும் வன்னிக்காடும் மட்டுமே மீதமுள்ளது. தமிழ் மண்ணில் ஆகப் பெரும் பேரதிர்வுகளை உருவாக்கப் போகும் இப்படைப்பு, “உன்னையும் இந்த மண்ணையும் காக்க ஒரு தாய் மக்களாக நில்லுங்கள்” என்று உரக்கப் பேச வருகிறது. ‘மாவீரம்’ சுமந்த இப்பெரு வரலாற்றின் படப்பிடிப்பு இதுவரை 76 நாட்கள் நடைபெற்று மீதமுள்ள ஐந்து நாட்கள் மெய்சிலிர்க்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு க்காகப் படையாண்ட மாவீரா குழு தயாராகிக் கொண்டிருக்கிறது” என்றார் உற்சாக நெகிழ்வுடன்.