
பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனியும் பரத்தும் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு – கேரளாவின் சகோதரத்துவத்தையும், இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் ‘வீரவணக்கம்’ ஆகும். பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள வீரவணக்கத்தில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் 2000 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
பிரபல புரட்சிப் பாடகியும் கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி. கிருஷ்ண பிள்ளை அவர்களின் வீர வாழ்க்கை வரலாறும் பெரியாரின் வாழ்க்கைத் தத்துவங்களும் இணைந்த இந்தப் புதுமையான திரைப்படம், ஒரு தாய் மக்களான தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு புது திரை அனுபவத்தை தரவுள்ளது.
அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கிய மலையாள பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘வசந்தத்திண்டே கனல் வழிகளில்’ என்ற காவியத்தின் இரண்டாம் பாகம் தான் வீரவணக்கம்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சமுத்திரகனியையும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமியையும் மலையாளத்தில் முதன்முறையாக கதாநாயகன் கதாநாயகியாக அறிமுகம் செய்த படம் தான் ‘வசந்தத்திண்டே கனல் வழிகளில்’. சமுத்திரக்கனி மீண்டும் பி. கிருஷ்ணபிள்ளையாக வீரவணக்கத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பெரும் ஜாதி கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகும் ஒரு தமிழ்க் கிராமத்தின் விடியல் பயணம் தான் வீரவணக்கம்.
இத்திரைப்படத்திற்கு எம்.கே. அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி. ரவீந்திரநாத்,ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப்பாளர்கள் ஐந்து அற்புதமான மனதை மயக்கும் பாடல்களை வழங்கியுள்ளது திரைப்படத்தின் தனிச்சிறப்பாகும். ‘சிம்மக்குரலோன்’ டி. எம். சௌந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ். செல்வகுமார் முதல் முறையாகத் திரைப்படப் பின்னணி பாடுகராக வீர வணக்கத்தில் அறிமுகமாகிறார். ‘மீண்டும் டி.எம்.எஸ்ஸே பாடி உள்ளாரோ!’ என எண்ணத் தூண்டும் மனதை உற்சாகப்படுத்தும் புரட்சிப் பாடலை அவர் பாடியுள்ளார்.
வீர வணக்கத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ‘நாட்டு நாட்டு’ உட்பட 600 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகர் யாசின் நிசார், கேரளாவின் முன்னணி நாட்டுப்புறப் பாடகர் சி.ஜே. குட்டப்பன், ரவிசங்கர் மற்றும் சோனியாவும் அருமையான பாடல்களைப் பாடியுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் இத்திரைப்படத்தில் கரம் கோர்த்துள்ளனர். விரைவில் வெளியாகயுள்ளது வீரவணக்கம் திரைப்படம்.