Shadow

“ஒரு மனிதன் ஏன் ‘கொலை’ செய்கிறான்?” – மிஷ்கின்

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’ ஆகும். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் மற்றும் பல முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் தனஞ்செயன், “இந்த இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் உருவாக மிக முக்கிய காரணம் நடிகர் விஜய் ஆண்டனிதான். தொடர்ந்து இரண்டு, மூன்று படங்கள் தயாரிக்க வேண்டும் என்று அவர்தான் எங்களை ஊக்கப்படுத்தினார். இந்தக் ‘கொலை’க்கு பிறகு ‘இரத்தம்’ வரும். அதன் பிறகு ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வரும். இப்படி அடுத்தடுத்து விஜய் ஆண்டனி அவர்களுடன் இணைந்து படத்தில் பணி புரிவது எங்களுக்கு மகிழ்ச்சி.

இந்தக் ‘கொலை’ திரைப்படத்தை லாக் டவுனில் ஆரம்பித்து கடைசி வருடம் வெளியிட முடிவு செய்திருந்தோம். இயக்குநர் பாலாஜி குமார் மிகச் சிறந்த படமாக இதைக் கொடுத்துள்ளார். ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி என நாயகிகள் இரண்டு பேருக்கும், படத்தின் தொழில் நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.

“பிச்சைக்காரன்-2′ வெளியானதும் என்னுடைய படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும். சிறிது காத்திருங்கள்” என்று விஜய் ஆண்டனி நம்பிக்கையாகச் சொன்னார். அவர் சொன்னது போலவே தற்பொழுது எங்களது இந்தக் ‘கொலை’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

க்ரைம் திரில்லர் உடன் சேர்ந்து படத்தில் நிறைய எமோஷனலான விஷயங்களும் உள்ளது. படத்தின் நேரம் 2 மணி நேரம் 8 நிமிடங்கள்தான். வரும் ஜூலை 21 ஆம் தேதி படம் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான மீடியம் பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றது போல இந்தப் படமும் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

இசையமைப்பாளர் கிரீஷ், “இந்தப் படம் என் கேரியரில் மிக முக்கியமானது என நினைக்கிறேன். வெளிநாடுகளில் சென்று இசையமைப்பது, பாடகர்கள் என அனைத்தையும் கேட்டவுடனே யோசிக்காமல் தயாரிப்பு தரப்பு செய்து கொடுத்தது. இசை, இயக்கம், தயாரிப்பு என விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. பாலாஜி குமாருடன் இது எனக்கு இரண்டாவது படம். என்னுடைய திறமையான தொழில்நுட்பக் குழு அனைவருக்கும் நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் குமார், “நான் முதலில் வேலை பார்த்த படக்குழுவுடன் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் வேலை பார்க்கிறேன். படத்தில் உள்ள ஏழு தயாரிப்பாளர்களும் ஒற்றுமையுடன் ஒரே சீராகப் பணி புரிந்துள்ளனர். அதனை இயக்குநர் பாலாஜி குமார், நடிகர் விஜய் ஆண்டனி, மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக்க கொண்டு சென்றுள்ளனர். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள்” என்றார்.

படத்தொகுப்பாளர் செல்வா, “இந்தப் படத்தில் நான் உள்ளே வரக் காரணமாக இருந்த இசையமைப்பாளர் கிரீஷ் மற்றும் சவுண்ட் டிசைனர் விஜய் ரத்தினம் இவர்களுக்கு நன்றி. விஜய் ஆண்டனி சாரின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் பிடித்துள்ளது. உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசும்போது, “இது தப்பான ‘கொலை’ அல்ல; சரியான ‘கொலைதான்’. தயாரிப்பாளராக தனஞ்செயனுக்கு இந்தப் படம் பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும். சின்ன கம்ப்ளையிண்ட்கூட இல்லாமல் படம் முடித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி குமார். அவர் ஜெயிக்க வேண்டும். விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாத சகாப்தமாக இருப்பார். இந்த ‘கொலை’யில் நிச்சயமாக ஒரு நியாயம் இருக்கும்” என்றார்.

நடிகர் மிஷ்கின், “இந்தக் ’கொலை’ படத்தின் டிரெய்லர் அருமையாக இருந்தது. சினிமா என்பது கூத்து என்ற கலையில் இருந்துதான் வந்தது. சினிமா எனும் கலையைப் புரிந்து இயங்குபவர்கள் இங்கு குறைவு. என்னைப் பார்ப்பவர்களே அடுத்து என்ன சார் கொலை படமா என்று கேட்பார்கள். அப்படி என் படங்களைச் சுருக்கி விட்டார்கள்.

‘கொலை’ என்ற இந்தப் படத்தின் டைட்டில் எழுத்துக்காக (Font) இயக்குநர் அவ்வளவு மெனக்கெட்டுள்ளார். ஒரு நல்ல இயக்குநர் படத் தலைப்பின் ஃபான்ட் மூலமாக பார்வையாளர்களுக்குக் கதை சொல்ல முடியுமா என்று யோசிப்பான். ஒரு மனிதன் ஏன் கொலை செய்கிறான்? உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு இருக்கும் ஒருவனின் வலியை நாம் எப்படி புரிந்து கொள்வோம்? அப்படி ஒரு இடத்திற்கு ஒரு மனிதன் உந்தப்படுவான் என்றால் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளான் என்று அர்த்தம்.

மகாபாரதம், ராமாயணம் என இதிகாசங்களில் கொலை. ஷேக்ஸ்பியரின் நாவல்களில் நான்கு கொலை பற்றிதான் சொல்கிறது. அது ஏன் என்று யோசிப்பவர்களால்தான் இது போன்ற படங்களை உருவாக்க முடியும். அந்த வகையில், இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தொடர்ந்து அவர் கொலை படங்களைச் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

என்னிடம், ‘நீங்கள் ஜாலியான ரெமாண்டிக் காமெடி படங்கள் எடுக்க மாட்டீர்களா?’ எனக் கேட்கிறார்கள். அப்படிச் செய்வதற்கு பதில் நான் தற்கொலை செய்து கொள்வேன். அது எனக்கு போர். ஒவ்வொரு கொலை படத்திலும் ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ஒரு மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமல் இறுக்கமாக உள்ளது. அதை விசாரித்து இயக்குநர் ஒரு சிறந்த படமாக தரும்போது அது வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன், “’போர் தொழில்’ படத்திற்கு பிறகு இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய வெற்றியாக அமையும் என பலரும் நம்பிக்கை கொடுத்தனர். இந்தப் படத்திற்காகக் கடின உழைப்பை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திர பிரதேசத்தில் பிசினஸ் பாருங்கள் என்று என் மீது நம்பிக்கையாகக் கொடுத்தர் விஜய் ஆண்டனி. அவருக்கு நன்றி” என்றார்.

நடிகர் ஜான் விஜய், “மிஷ்கின் சொன்னது போல, இந்தப் படத்திற்காகப் படக்குழுவினர் எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளார்கள் என்பது தெரிகிறது. இந்தப் படத்தில் நான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நீங்கள் கொடுக்கும் விலைக்கு இந்தக் ‘கொலை’ மதிப்பானது” என்றார்.

நடிகை மீனாட்சி செளத்ரி, “தமிழில் இது எனக்கு முதல் படம் என்பதில் மகிழ்ச்சி. இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் என அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு எனக்குக் கொடுத்தனர்” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி, “இந்தக் ’கொலை’ படம் போலவே நல்ல கன்டெட்டுடன் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. படத்தொகுப்பு, இசை என அனைத்து தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக செய்துள்ளனர்.

இயக்குநர் பாலாஜி நிறைய ஹாலிவுட் படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் பற்றி ஒரு ரகசியம் சொல்கிறேன். எலான் மஸ்க் தங்கச்சியின் நண்பர் அவர். இந்தப் படத்தின் கதாநாயகி மீனாட்சி செளத்ரி தமிழ் தெரியாமல் கூடப் பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்துள்ளார். மிஷ்கின் சாருடைய பேச்சு கொலை செய்ய வேண்டும் என்று தோன்றுமளவுக்கு சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சியைப் போலவே படமும் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.