Shadow

அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம்

Amitabh-in-Tamil-Cinema

இந்தியத் திரையுலகின் பிதாமகன், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து தமிழ் வாணன் இயக்கத்ததில் அவர் நடிக்கவுள்ள படத்தின் பெயர் “உயர்ந்த மனிதன்”.

திருச்செந்தூர் முருகன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமன்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்கப்பட உள்ளது.

“ஒரு துணை இயக்குநராகத் திரையுலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம்” என்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மார்ச் 2019 இல் படப்பிடிப்புத் துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த ஆண்டு ஸ்பைடர், மெர்சல் என வில்லத்தனத்திலும் மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள இறவாக்காலம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. இந்நிலையில் தனது அடுத்த படத்தைப் பற்றி அறிவிப்பை அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் தமிழ்வாணன், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது படத்தின் தலைப்பையும் போஸ்டரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். அந்தக் காணொளியைப் பத்திரிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு திரையிட்டுக் காண்பித்தார் எஸ்.ஜே.சூர்யா.

“நேற்று ட்விட்டரில் என் அடுத்த படத்தைப் பற்றிய பிரம்மாண்ட அறிவிப்பு இருக்கும் என பதிவிட்டதற்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். நான் அடுத்து நடிக்கும் படம் உயர்ந்த மனிதன். தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது. இந்தியன் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சார் முதன்முறையாக இந்தத் தமிழ்ப்படத்தில் நடிக்கிறார். நான் இந்தியில் நடிகனாக அறிமுகம் ஆகிறேன். நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டியது இயக்குநர் தமிழ்வாணனுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணனுக்கும்தான்.

இயக்குநர் கொண்டு வந்த கதை தான் அமிதாப் சார் வரைக்கும் இந்தப் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறது. 2 வருடங்களுக்கு மேலாக இந்தப் படத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது. திரைக்கதை மட்டும் ஒரு வருடம் எழுதியிருக்கிறார். ஸ்கிரிப்டை அமிதாப் பச்சன் சாரிடம் கொண்டு சென்று கொடுத்தோம். எல்லாம் படித்து முடித்த பிறகு அவரை இறுதியாக ஒரு முறை சந்தித்தோம். ‘கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன, அவற்றை விளக்க வேண்டும்’ என்றார். அதைக் கேட்ட பிறகு கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்றார். அதை யார் அறிவிக்க முடியும் என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரால் தான் முடியும். அவரும் உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அழைத்து எங்களை வாழ்த்திப் பட அறிவிப்பை வெளியிட்டார்.

நான் ஏதோ சாதனை செய்து விட்டது போல பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்தப் படத்தை ஒருங்கிணைத்ததே எனக்கு ஒரு பெரிய சாதனை தான். அமிதாப் பச்சன் சாரின் 2019 ஆம் ஆண்டின் கால்ஷீட்டைக் காட்டினார்கள். நாங்கள் 40 நாட்கள் கேட்டோம். 35 நாளுக்கு மேல், 5 நாட்கள் கூட எங்கள் படத்துக்குக் கூடுதலாக ஒதுக்க முடியாது என்ற நிலையில் மிகவும் பிஸியாக இருந்தார். 2019இல் மட்டும் 6 படம், கோன் பனேகா க்ரோர்பதி, விளம்பரங்கள் என இந்த வயதிலும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார். அவர் நமக்கெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு நடிகர் திலகம் சிவாஜி சார் அவர்களின் உயர்ந்த மனிதன். இந்தத் தலைப்பை ஏவி.எம்.-இடம் இருந்து வாங்கியிருக்கிறோம். இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கும் நன்றி. கஷ்டத்தில் இருக்கும்போது இயக்குநர் சொன்ன வார்த்தைகளே தெம்பைக் கொடுத்தது. இந்தப் படம் இந்தியா முழுக்க மட்டுமின்றி சைனா வரை போகும். கதை அப்படி அமைந்திருக்கிறது” என்றார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.

“இந்தக் கதையை எழுதி முடித்தபோதே எஸ்.ஜே.சூர்யா சாரிடம் சொன்னேன். இந்தப் படத்தை ஆசைப்பட்டது மட்டும் தான் நான், இதை இந்த அளவுக்குக் கொண்டு போனது சூர்யா சாரும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் சாரும் தான். அமிதாப் பச்சன் சார், சூர்யா சார் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் கதை” என்றார் இயக்குநர் தமிழ்வாணன்.