பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சியில் Dr.T.K.மூர்த்தி, திரு. M. சந்திரசேகரன் மற்றும் திரு. விக்கு விநாயக ராம் முரளி ஆகியோர் நாத லஹிரி விருது பெற்றனர்.
பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சி Dr.M.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் 92ஆவது பிறந்த நாளான ஜூலை 6 ஆம் தேதி அன்று விருது வழங்கும் நிகழ்ச்சியாகவும்,இசை நிகழ்ச்சியாகவும் கோலாகலமாக நடைபெற்றது.
Dr. M. பால முரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் பாரதிய வித்யா பவன் மற்றும் ssvm நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் தொடக்கமாக பால முரளி கிருஷ்ணா அவர்களின் பிரதான சீடர்களான Dr. K. கிருஷ்ணகுமார் மற்றும் திருமதி பின்னி கிருஷ்ணகுமார் அவர்களின் குழு, பால முரளி பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாடித் துவக்கி வைத்தனர்.
கர்நாடக இசை உலகின் உச்சத்தைத் தொட்ட இசைக் கலைஞர்கள் Dr.T.K. மூர்த்தி (மிருதங்கம்), திரு.M. சந்திரசேகரன் (வயலின்) மற்றும் திரு. விக்கு விநாயக ராம் (கடம்) அவர்களுக்கு முறையே 2020, 2021 மற்றும் 2022 ஆம் வருடங்களுக்கான “முரளி நாத லஹிரி” விருது மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலையை Dr. M. பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை சார்பாக Dr. வம்சி மோஹன் Dr. சுதாகர் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கர்நாடக இசை உலகின் பல்கலை வித்தகர் Dr. T.V. கோபால கிருஷ்ணன் மற்றும் பாரதிய வித்யா பவன் இயக்குனர் திரு. K.N.ராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கு பெற்று Dr.பாலமுரளி கிருஷ்ணா அவர்களுடனான நினைவுகளையும், அவரின் சிறப்புகளையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.