Shadow

Eleven | D.இமான் இசையமைக்கும் முதல் த்ரில்லர் படம்

ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் உருவாகியுள்ள ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். க்ரைம் த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

‘லெவன்’ பத்தின் ட்டிரெய்லரை உலக நாயகன் கமல்ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மே 16 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ”நண்பர் அக்பரின் வாரிசான அஜ்மல் கான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைக்கும் அளவிற்குக் காட்சிகள் த்ரில்லிங்காக இருக்கிறது. இமானின் இசை படத்திற்குக் கூடுதல் சிறப்பு. இந்நிறுவனம் தயாரித்த இந்த மூன்றாவது திரைப்படமும் வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகை ரியா ஹரி, ”நவீன் அவர்களை இப்படத்திற்கான போட்டோ ஷூட்டின் போது முதன்முதலாக சந்தித்தேன். எனக்கு இருந்த தயக்கத்தை உடைத்து இயல்பாகப் பழகினார். படப்பிடிப்புத் தளத்தில் எனக்குச் சிறிய நுட்பமான பல விஷ‌யங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் ஒட்டுமொத்த படக்குழுவையும் இயல்பாக வைத்திருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதது. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் ஒரு மேஜிக் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும்போது உங்களுக்குள் நிபந்தனையற்ற அன்பு இருப்பதை உணர்வீர்கள். அந்த அதீத அன்பு ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இந்தத் திரைப்படம் த்ரில்லராக இருந்தாலும் எமோஷனலான படம்” என்றார்.

இசையமைப்பாளர் டி.இமான், “திரையுலகில் 23 ஆண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் இதுவரை க்ரைம் திரில்லர் ஜானரிலான திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.‌ அந்த வகையில் ‘லெவன்’ என்னுடைய இசையில் வெளியாகும் முதல் க்ரைம் த்ரில்லர் திரைப்படம்.‌ இதற்காக இயக்குவர் லோகேஷ் அஜில்ஸுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ டி டியில் படங்களை பார்க்கும் போது ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்களை தான் விரும்பி பார்ப்பேன். உச்சகட்ட காட்சி வரை ஆர்வம் குறையாமல் பார்க்கலாம். நான் இயக்குநர் சுந்தர்.சி உடன் எட்டு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அந்தத் தருணத்தில் அவருடைய உதவியாளர்களும் இருப்பார்கள். அவர்களும் படத்தை இயக்கும் போது எனக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். அந்த வகையில் லோகேஷ் என்னைச் சந்தித்து நான் சுந்தர்.சி உதவியாளர். ஒரு கதையை உங்களிடம் சொல்ல வேண்டும் என கேட்டபோது, நான் மாஸான கமர்ஷியல் என்டர்டெய்னராக தான் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் கதையைக் கேட்கும் போது பக்காவான க்ரைம் திரில்லர் ஜானரில் இருந்தது. கதை கேட்டு முடித்ததும் அவரிடம் முதலில், .இந்தக் கதைக்கு என்னை எப்படி யோசித்தீர்கள்?’ எனக் கேட்டேன். ‘இதுவரை நீங்கள் இந்த ஜானருக்கு இசை அமைக்கவில்லை. நீங்கள் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இயக்குநர் லோகேஷ் அஜில்ஸின் எழுத்து சிறப்பானதாக இருந்தது. படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். படத்தைப் பார்த்த பிறகு அவரை ஃபோனில் பாராட்டினேன்.‌ இந்தப் படத்தில் வரும் சைலன்ஸ் கூட ரசிகர்களுக்குப் பிடிக்கும்.

இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடகர் மனோ பாடியிருக்கிறார்.‌ இதுவரை எத்தனையோ பாடல்களுக்கு நான் இசையமைத்திருந்தாலும் எனது இசையில் மனோ பாடியதில்லை. இந்தப் படத்தில் அது நடந்து இருக்கிறது. இதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.‌ ‘போர் தொழில்’, ‘ராட்சசன்’ போன்று இந்தத் திரைப்படமும் இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை” என்றார்.

நடிகர் நவீன் சந்திரா, ”ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘சரபம்’ என்றொரு தமிழ்ப் படத்தில் நடித்தேன்.‌ அதன் பிறகு தமிழில் ‘லெவன்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தை ஒரு படமாக இல்லாமல் இரண்டு படமாகப் படப்பிடிப்பு நடத்தினோம். அதற்காக நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. மே 16 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.‌

நான் இமானின் தீவிர ரசிகன். படத்தில் எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கின்றன‌. இதற்காக அவருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘விருமாண்டி’ படத்தில் அபிராமி அவர்களின் நடிப்பைப் பார்த்து வியந்து இருக்கிறேன். படப்பிடிப்புத் தளத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்கும் நாட்களுக்காகக் காத்திருந்தேன், நட்பாகப் பழகினார். காட்சிகளில் நடிக்கும்போது அவருடைய திறமையை நேரில் பார்த்து வியந்தேன். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.” என்றார்.

இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “ஒரு படத்திற்கு நடிகர்கள் அமைந்துவிட்டால் பாதி வெற்றி உறுதியாகி விடும் என்று சொல்வார்கள் அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. நவீன், திலீபன், ரியா, அபிராமி, ரித்விகா ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிடில்கிளாஸ் மாதவன் படத்தில் அபிராமியின் ரசிகன் நான்.

என்னுடைய முதல் படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க வேண்டும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற போது தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு என்னுடன் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான் காரணம்.

நானும், கார்த்திக்கும் நண்பர்கள். நான் உதவி இயக்குநராகவும், அவர் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி பயணத்தை தொடங்கிய தருணத்திலிருந்தே நண்பர்கள். அவன் தான் இந்தப் படத்திற்கு முதுகெலும்பு. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எனக்குக் கூட சில தருணங்களில் சோர்வு எட்டிப் பார்க்கும். ஆனால் கார்த்திக் சோர்வே இல்லாமல் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இந்தப் படத்தின் டீசர் வெளியானவுடன் வேறொரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமானார்.

இமான் சார் எனக்குக் கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். படத்தில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். அதிலும் இடைவேளை தருணத்தில் அவர் வழங்கி இருக்கும் பின்னணி இசை நிச்சயம் பேசப்படும். இமான் சாரின் 2.0 வெர்ஷ‌னை இப்படத்தில் பார்க்கலாம்” என்றார்.