
விலைவாசி உயர்வையும், கடன் சுமையையும் சமாளிக்க முடியாமல், வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு வெடிகுண்டு விபத்தில் தொடர்புடையவர்களாகத் தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகின்றனர் காவலர்கள். அந்தச் சிக்கலில் இருந்து தர்மதாஸின் குடும்பத்தினர் மீண்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
தர்மதாஸின் இளைய மகன் முல்லியாகக் கமலேஷ் ஜெகன் நடித்துள்ளார். இவர், ராட்சசி படத்தில், ஜோதிகாவை வெட்கத்துடன் காதலிக்கும் கதிர் எனும் பள்ளிச் சிறுவனாக நடித்திருப்பார். இப்படத்தின் கலகலப்பிற்குப் பொறுப்பேற்றுள்ளார். சூழ்நிலைகளைக் கிரகித்து உடன்நிகழ்வாக (Spontaneity) அவர் சொல்லும் பொய்களும், அழகான முக பாவங்களும் ரசிக்க வைக்கின்றன. யோகிபாபு உடன் வரும் காட்சிகளில் கூட கமலேஷ் ஜெகன் தான் ஸ்கோர் செய்கிறார். தர்மதாஸின் மூத்த மகன் நிதூஷனாக மிதுன் ஜெய்சங்கர் நடித்துள்ளார். தந்தைக்கும் மகனுக்குமான இறுக்கம் தளரும் காட்சியில், மிகச் சிறப்பாக நடித்துள்ளார். வேளச்சேரி இன்ஸ்பெக்டர் ராகவனாக பகவதி பெருமாள் நடித்துள்ளார். அவரது மகள் குறளாக நடித்திருக்கும் யோகலக்ஷ்மி, தனக்கு எந்த வயதில் மெச்சூரிட்டி இல்லை, எந்த வயதில் வந்தது எனச் சொல்லும் காட்சியில் ரசிக்க வைக்கிறார். தர்மதாஸின் மனைவி வசந்தியாக சிம்ரனும், சிம்ரனின் தம்பி பிரகாஷாக யோகிபாபுவும், தர்மதாஸாக சசிகுமாரும் நடித்துள்ளனர். வடிவேலுவின் வசனமான, “என்ன சிம்ரன் இதெல்லாம்?” என சிம்ரனைக் கேட்குமிடத்தில் மட்டும் யோகிபாபு கலகலக்க வைக்கிறார். ஏட்டு பைரவனாக வரும் ரமேஷ் திலக்கின் கதாபாத்திரம் மிக நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிகக் கலகலப்பாகத் தொடங்கி, நம்மைச் சுற்றி வாழும் மனிதர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாகப் படம் முடிகிறது. இருபத்து நான்கு வயது இயக்குநரான அபிஷன் ஜீவிந்(த்), அந்தக் கலகலப்பையும் நம்பிக்கையையும் திரைக்கதையில் அடைய, ஒரு கணித சூத்திரத்தைப் பயன்படுத்தும் லாகவத்துடன் காட்சிகளைக் கட்டமைத்துள்ளார். இந்தக் காட்சியில் சிரிக்க வைக்க வேண்டும், இந்தக் காட்சியில் தழுதழுக்க வைக்கவேண்டும் என்ற அவரது திட்டமிடலைக் கச்சிதமாகச் செயற்படுத்தியுள்ளார். அதற்கு, இளங்கோ குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீஜா ரவி போன்ற கேசவ் நகர் காலனி குடியிருப்புவாசிகள் அனைவருமே ரெடிமேட் கேரக்டர்களாக உதவியுள்ளனர். உச்சபட்சமாக இயக்குநரே குடிகார இளைஞனாகத் தோன்றி, படத்தின் மெலோடிராமத்தனத்தை அதிகப்படுத்தியுள்ளார். நிதூஷன் மீது குறளுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் தோன்றவேண்டும் என்பதற்காக, குறளை வம்படியாக அந்த வீட்டிற்குள் கொண்டு வருகிறார். காட்சிகளின் மூலமாக பார்வையாளர்களுக்கு என்ன எமோஷனைக் கொடுக்கவேண்டும் என்பதில் இயக்குநர் காட்டியுள்ள கவனத்தைத் திரைக்கதையின் இயல்பான ஓட்டத்தில் காட்டவில்லை. ஆனால் அது ஒரு குறையாக உறுத்தவில்லை.
ஈழத்தமிழர்கள் மீது தமிழகத் தமிழர்கள் கொண்டுள்ள மென்னுணர்ச்சி தான் படத்தில் இழையோடும் அடிநாதம். ரோந்து பணியில் இருக்கும் இராமேஸ்வரத்து ஏட்டு பைரவன், ஆறாம் வகுப்பு சமூகவியல் ஆசிரியர், வேளச்சேரி இன்ஸ்பெக்டர், சென்னை வாழ் பஞ்சாபி என அனைவருமே, அக்குடும்பத்தை அந்நியமாகக் கருதாமல் ஏற்றுக் கொள்கின்றனர். சட்டவிரோதமான குடியுரிமையை இப்படம் ஆதரிக்கவில்லை என்ற ‘டிஸ்கி’யுடன், அது சம்பந்தப்பட்ட காட்சிகளை யோகிபாபுவின் மூலமாக நகைச்சுவையாகக் கடந்துவிடுகின்றனர். சட்டத்திற்குப் புறம்பானதாக இருப்பினும், தார்மீக ரீதியான அளவுகோலின்படி அணுகினால், நல்லதொரு ஃபீல் குட் படத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி.