
ரெட்ரோ எனும் சொல் பின்னோக்கிய காலத்தைக் குறிக்கிறது. கதையின் காலகட்டம் செல்ஃபோன்கள் பரவலாகாத தொண்ணூறுகளின் இறுதியாகும்.
தூத்துக்குடியில், ஒரு டானால் வேண்டாவெறுப்பாக வளர்க்கப்படுகிறார் பாரிவேல் கண்ணன். அடிதடியே வாழ்க்கையென வாழும் பாரிக்கு சுமார் 35 வயதானதும், அவரது காதலி ருக்மிணியின் விருப்பத்திற்கிணங்க வன்முறையைக் கைவிட முடிவெடுக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாகத் அவரது திருமண நாளன்றே, ருக்மிணியை வெட்ட வரும் வளர்ப்புத் தந்தையின் கையை வெட்டி விடுகிறார் பாரி. பாரி சிறைக்குச் செல்கிறார், மனம் நோகும் ருக்மிணி தலைமறைவாகிறார், மகனிடம் இருந்து எப்படியேனும் அவன் மறைக்கும் தங்கமீன் ரகசியத்தை அறியத் துடிக்கிறார் பாரியின் வளர்ப்புத் தந்தை. இது படத்தின் முதற்பாதி.
பாரியைச் சிறையில் இருந்து மீட்டு, சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் சண்டைப் போட்டியில் பங்கு பெற வைக்க முயல்கிறது ஒரு குழு. ஆனால் பாரியோ அக்குழுவிடம் இருந்து தப்பி, ருக்மிணியைக் காண அந்தமான் செல்கிறார். கோபத்தில் இருக்கும் காதலி, கையை இழந்த தந்தையின் வெஞ்சினம், தங்கமீன் ரகசியம், சண்டைப் போட்டி நடத்தும் குழு, கருந்தீவில் கொத்தடிமைகளாகச் சிக்கித் தவிக்கும் மக்கள் என எல்லாப் புள்ளிகளும் அந்தமானில் சங்கமிக்கிறது.
காதல், யுத்தம், நகைப்பு, Cult, தம்மம் என அத்தியாயங்களாகப் படம் விரிகின்றன. தூத்துக்குடி, காசி, சிறைச்சாலை, அந்தமான என நிலப்பரப்பும் மாறிக் கொண்டே இருக்கிறது. சூர்யாவும் மாறிக் கொண்டே இருக்கிறார். அடிதடியில் கரை கண்ட மகன், வன்முறையைக் கைவிட நினைக்கும் காதலன், அடிவாங்கும் சிறைக்கைதி, அடிக்கும் சிறைக்கைதி, சிரிப்பு டாக்டர் சாப்ளின், டீமன் (Demon), சாமியாடியால் முன்னுரைக்கப்பட்ட அந்த ஒருவன் (The One) என சூர்யாவின் மன உலகமும் மாறிக் கொண்டே இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ், பல லேயர்ஸை இந்தக் கதைக்குள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க முனைந்துள்ளார். ஒன்றல்லது இரண்டு லேயரில் படம் பார்த்துப் பழகியவர்களுக்குக் கனெக்ட் செய்து கொள்வதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மருத்துவர் ருக்மிணியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவரேற்ற கதாபாத்திரத்திற்கு முதல்முறையாகத் தமிழில் பின்னணி பேசி அசத்தியுள்ளார். உடை வடிவமைத்துள்ள பிரவீன் ராஜா, பூஜாவிற்கு ஒப்பனை செய்தவர், ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோரின் கைவண்ணத்தில் ருக்மிணி கதாபாத்திரம் மனதைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. தன் உயிரைக் காப்பாற்றும் தற்காப்பு முயற்சியில்தான் பாரிவேல் வேறு வழியில்லாமல் தந்தையின் கையை வெட்டவேண்டியதாகிவிட்டது என்ற அடிப்படையான விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல், ‘சந்தைக்குப் போகணும். ஆத்தா வையும். காசு கொடு’ எனச் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கும் சப்பாணி மனநிலையில், ‘உன்னால வயலன்ஸை விட முடியாதில்ல?’ என முறுக்கிக் கொள்கிறார். இறைவியின் க்ளைமேக்ஸ் காட்சியை மறு உருவாக்கம் செய்ய நினைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் எழுத்தில் அதற்கான மெனக்கெடலைப் போடாமல், ருக்மிணியின் அகத்தை வழக்கமான சினிமா கதாநாயகியாக்கி விடுகிறார் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் அச்சாணி முறிந்த காட்சியென இதைச் சொல்லலாம். இயக்குநர் கோட்டை விட்ட இப்புள்ளியை, தன் இசையின் மூலமாக சாமர்த்தியமாகத் தற்காத்து முன்னகர்த்தியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.
மேற்பத்தியில் சொன்ன காட்சிக்கு முன் ‘கனிமா’ பாடல் இடம்பெறுகிறது. இசை, பின்னணி ஒலிக்கோர்வை, கேமரா கோணம் தொடங்கி முடியும் இடம், நடிகர்களின் பங்களிப்பு, நடனம், இடையிடையே வரும் கனமிக்க வசனங்கள் என சினிமாவின் உச்சபட்ச சாத்தியத்தைத் திரை அனுபவமாக அளித்துள்ளது படக்குழு. ஜோஜு ஜார்ஜ், சந்தோஷ் நாராயணன், சூர்யா, பூஜா ஹெக்டே என ஒவ்வொருவராகப் பாடலுக்குள் இடம்பெறும் போது ஒருவித Vibe தொற்றிக் கொள்கிறது.
சாப்ளின் லாலியாக வரும் ஜெயராமின் கதாபாத்திரம் முழுதாக உருபெறவில்லை. தனது அனுபவத்தின் காரணமாக அதை நடிப்பால் அழகாகச் சமாளித்துவிடுகிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ஷெட்டாணியாக நடிப்பில் கலக்கியிருந்த விது (வித்யாசங்கர் நீலமேகம்), இப்படத்தில் பணக்கார சைக்கோவாக வருகிறார். ஒரு கொலைக்களத்தை உருவாக்கி, வீரர்களையும் – ரப்பர் எஸ்டேட் தொழிலாளிகளையும் மோத வைத்து ரசித்து, அதில் இறக்கும் மனிதர்களை முதலைகளுக்கு இரையாக்குபவராக வருகிறார். படம், அங்கு, இங்கு, 1860, 1960 எனப் பயணப்படுவதால் கதாபாத்திரங்கள் யாரும் வலுவாக மனதில் பதியாமல் போகின்றனர். இப்படத்தில் விது ஏற்ற மைக்கேல் மிராசு எனும் பாத்திரம், இரண்டாம் பாதியின் பிரதான வில்லனாக வருகிறது. ஆனால் அவரது ஷெட்டாணி பாத்திரத்தின் காவியத்தன்மை முன் இப்பாத்திரம் பொலிவிழந்தே காணப்படுகிறது. சூர்யா போன்ற நாயகனுக்கான வில்லனாக அவரைப் பார்க்க முடியவில்லை. அந்தக் கதாபாத்திரமும், The One -ஐ எதிர்த்து நிற்குமளவுக்கு வலுவானதாக இல்லாமல் ஃப்ரீக்கியாகவே படைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஃப்ளாஷ்-பேக்கின் ஊடே படத்தின் தலைப்பைப் போட்டதும், அதைத் தொடர்ந்து பாரியின் சிறுவயது கதாபாத்திரத்தில் தோன்றும் சிறுவனை ஃப்ரீஸ் செய்து, அதன் மேல் சூர்யாவின் கிராஃபிக் புகைப்படத்தைப் பயன்படுத்திய விதமும் அற்புதமாக உள்ளது. இந்தப் பல்லடுக்கு லேயரில் தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டு பரிணமிக்கிறார் சூர்யா. ஒரு சின்ன புன்னகை எத்தனை அழகானதென ஒரு காட்சியில் சூர்யாவின் மூலமாகப் பதிந்திருப்பார் இயக்குநர்.
ஃப்ரீ-க்ளைமேக்ஸில் யுத்தம் போல் ஒரு நீண்ட சண்டைக்காட்சி வருகிறது. மீண்டும் க்ளைமேக்ஸில் துப்பாக்கி ஏந்திய ஒரு படையுடன் ஜோஜு ஜார்ஜ் வருகிறார். படத்தின் நீளமோ 168 நிமிடங்கள். ‘என்ன மீண்டுமொரு சண்டையா?’ என அயர்வு எட்டிப் பார்க்கும்போது, ‘இந்த உலகின் வலுவான ஆயுதம் சிரிப்பு’ என படத்தை அதியற்புதமாக முடித்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ் ஆச்சரியப்படுத்துகிறார்.