
ஒரு பள்ளிச்சிறுமி காணாமல் போக, அவ்வூரில் நடக்கும் பல குற்றங்களையும் பட்டியலிட்டு, பள்ளி ஆசிரியை ஒருவர் காவல்துறையில் புகார் அளிக்கிறார். அப்புகாரைப் புலனாய்வு செய்ய காவல்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார். அவ்வூரிற்கு ஆசிரியரராக வரும் சரவணன், பள்ளிச்சிறுமி காணாமல் போனதன் மர்மத்தைக் கண்டுபிடிப்பதோடு, அந்த ஊரில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூறு கோடியையும் அபகரிக்கத் திட்டமிடுகிறார். அதற்கு அவருடன் இணையும் கேங்கர்ஸ் உதவுகின்றனர்.
ஆசிரியை சுஜாதாவாகக் கேத்தரின் தெரசாவும், விளையாட்டு ஆசிரியர்கள் சிங்காரமாகவும் சரவணனாகவும் வடிவேலுவும், சுந்தர்.சி-யும் நடித்துள்ளனர். பயந்த சுபாவம் உள்ளவராகப் பகவதி பெருமாளும், வடிவேலுவால் தொழில் பாதிக்கப்பட்டவாரக முனீஷ்காந்தும், முனீஷ்காந்தின் நண்பராகக் காளையனும் நடித்துள்ளனர். இவ்வைவரும் கேங்கர்ஸாகக் கூட்டு சேர்கின்றனர்.
இந்தக் கூட்டணி அமையும் முன், படத்தின் முதற்பாதி இலக்கற்றுப் பயணிக்கிறது. ஆதலால் வடிவேலுவின் நகைச்சுவையும் விலாவை நோக வைக்கச் சிரமப்படுகிறது. தான் என்னென்ன அடிக்கவில்லை என்று அவர் பேசும் நீண்ட வசனம் மட்டும் முதற்பாதியில் ஈர்க்கிறது. கேத்ரீன் தெரசாவின் கதாபாத்திரம், படத்திற்குப் பலமாகவும், கதாபாத்திரங்களை இணைக்கும் பாலமகாவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியில் வில்லனும், கொள்ளைத் திட்டமும் திரைக்கதையில் வந்ததும் படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. கேங்கர்ஸ் கூட்டத்தில் காளையனும் இணைய, முதற்பாதியில் தென்படாத கலகலப்பு இரண்டாம் பாதியில் எட்டிப் பார்க்கிறது. வில்லனின் வீட்டுக்குள் சென்று உளறிச் சொதப்பும் காட்சியில் பகவதி பெருமாள் ரசிக்க வைக்கிறார்.
படத்தின் நீளம் சற்றே அயர்வைத் தருகிறது. எனினும் சுந்தர்.சி, ஆங்காங்கே தன் முத்திரையைப் பதித்துவிடுவதால் படம் ரசிக்கும்படியாக உள்ளது.