Shadow

“சாமானிய வியாபாரிகள் மீது உள்ளன்போடு இருப்பவர் லெஜண்ட் சரவணன்” – A.M.விக்கிரமராஜா

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கான பிரத்தியேக அசைவொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A.M. விக்ரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார்.

இவ்விழாவில் பேசிய திரு. விக்ரமராஜா, “நாடறிந்த தொழிலதிபர் சரவணன் என்பது அனைவருக்கும் தெரியும். தகப்பனார் ஒரு பிரபலமான நிறுவனத்தை ஸ்தாபித்து அதனைப் பிள்ளைகளின் கைகளில் கொடுக்கும் போது சில பிள்ளைகள் வெற்றி பெறுவதுண்டு, சில பிள்ளைகள் தோற்றுப் போவதுண்டு. ஆனால் இதற்கெல்லாம் மாற்றாகக் கடுமையாக உழைத்து ஆசியா கண்டத்திலேயே சிறந்த விற்பனையாளர் என்று உயர்ந்து கொண்டிருப்பவர் தான் மரியாதைக்குரிய சகோதரர் லெஜண்ட் சரவணன். இது அவருடைய இரண்டாவது திரைப்படம். அவருடைய முதல் படத்தை நான் பார்த்திருக்கிறேன். மிக நன்றாக இருக்கும். அதுவும் வெற்றிப்படம் தான். ஆனால் இந்தப் படம் அதையும் தாண்டி சிறந்த மைல்கல் படமாகத் திகழும். இது வெற்றி பெறுவது நிச்சயம். இதை யாரும் தடுத்திட இயலாது. இந்த ‘லீடர் ‘ கட்டாயம் வெற்றி பெறுவார்.

இரண்டரை மணி நேர திரைப்படம் என்று சொன்னாலும் மக்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மக்கள் அதைப் பார்த்து ரசிக்கக்கூடிய வகையிலும், மன மகிழ்ச்சியோடு வரக்கூடிய சூழலிலும் இந்தப் படம் அமையவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தைத் திட்டமிட்டுப் பணியாற்றி இரவு பகல் பாராது உழைத்திருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெறும். இந்த விழாவில் எங்களையும் அழைத்து கௌரவப்படுத்தியதற்காக நன்றி. தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு பெட்டிக்கடை நடத்தும் சாமானிய வணிகர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் இந்த மேடை அமைந்திருக்கிறது. ஆகவே இந்த நிகழ்ச்சி எங்களுடைய குடும்ப நிகழ்ச்சி. ஒவ்வொரு வணிகர்களும் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக எப்படி கடுமையாக உழைத்து, முன்னேற வேண்டும் என்பது குறித்து தான் நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் சரவணன் அவர்கள் விவாதிப்பார்.

ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் கம்பெனிகள், இது போன்ற நிறுவனங்களால் சாமானிய வணிகர்கள் பாதிக்கப்படாமல் அவர்களைப் பாதுகாப்பதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறீர்கள் என்பது குறித்து தான் பேசுவார். ஜிஎஸ்டி பிரச்சினையாக இருந்தாலும், உணவு பாதுகாப்பு துறை சட்டம் சம்பந்தமான விஷயமாக இருந்தாலும் சாமானிய வியாபாரிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அதிக அக்கறையுடன் விவாதிக்கக் கூடியவர். அவர்கள் மீது உள்ளன்போடு இருப்பவர்தான் லெஜண்ட் சரவணன்.

லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு உலகம் முழுவதும் சரவணனின் பெயர் கொடி கட்டி பறக்கும்” என்றார்.

கமர்ஷியல் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவிருக்கிறது.