
‘ககன மார்க்கன்’ என்றால் வான் வழியே பயணிப்பவன் எனப் பொருள். அது அப்படியே சுருங்கி மார்கன் ஆகிவிட்டது.
ஒரு ஊசி போட்டால் உடல் கருகி வினோதமான முறையில் இறக்கும் வேதியியல் ஃபார்முலாவை உருவாக்கி வைத்துள்ளார் வில்லன். அப்படிக் கொடூரமாக இறக்கும் ரம்யாவின் மரணத்துடன் படம் தொடங்குகிறது. தனது மகளைப் போலவே கொல்லப்பட்டிருக்கும் ரம்யாவின் வழக்கைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்க சென்னை வருகிறார் காவல்துறை அதிகாரியான துருவ் கோரக். அவரது முகத்தின் இடது பக்கம் கூடக் கருப்படைந்து அரைகுறையாகச் செலுத்தப்பட்ட ஊசியால் பாதிக்கப்பட்டவராக உள்ளார். துருவ் கோரக் கொலையாளியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு.
கொலைக்காரனால் துரத்தப்படுவதாகக் காட்டப்படும் வெண்ணிலா எனும் பாத்திரத்தில் நடித்துள்ள கனிமொழி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படம் முடியும் பொழுது எல்லாக் கதாபாத்திரங்களையும் மறக்கவைக்கும் அளவிற்குச் சிறப்பான கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் எழுதி இயக்கியுள்ள லியோ ஜான் பால். படத்தொகுப்பாளரான லியோ ஜான் பால்க்கு இயக்குநராக இது முதற்படம். அதனால் நாயகனை அறிமுகம் செய்யவேண்டும் என்றெல்லாம் வேறெங்கும் அலையாமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கிவிடுகிறார். சுவாரசியம் மட்டுப்படாமல் கடைசி வரை திரைக்கதையை நகர்த்தியுள்ளார். விசாரணைக்கு உதவும் காவல்துறை அதிகாரிகளாக மகாநதி சங்கர், இன்ஸ்பெக்டர் ஸ்ருதி செல்வராஜாக பிரிகிடா, SDAT ஊழியராக வரும் அம்ஜத் கான் போன்றோரும் நன்றாக நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனியின் பெயர் தோன்றும் முன்பே, அறிமுகம் – அஜய் தீஷன் என்ற பெயர் தோன்றுகிறது. படத்தின் நாயகன் என்று அவரைத்தான் சொல்லவேண்டும். பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்தும் உள்ளார். சிறுவயதிலேயே கஞ்சம்பட்டியில் சித்தரருள் பெற்றவராகக் காட்டப்படும் தமிழறிவு எனும் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். படத்தில், ககன மார்க்கமாகப் பயணிப்பவர் இவர்தான். தண்ணீருக்குள் மூழ்கியுள்ள பொழுது, அவரால் கடந்தகாலத்திற்குச் செல்லமுடிவதோடு, அந்தக் காலத்துக்குள் அவரால் காற்றில் சூட்சம உடலோடும் நீந்த முடிகிறது. படத்தின் முக்கியமான க்ளூக்கள் அனைத்தும் அவரது psychic power கொண்டே துப்பு துலக்கப்படுகிறது. அவரது சக்திக்கான காரணமாகக் கஞ்சம்பட்டி சித்தர், ஆமை ரெஃபரென்ஸ், நாடி ஜோதிடர் அப்பா என பின் கதையையும் தீர்க்கமாகச் சொல்லியுள்ளனர்.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வந்தாலும், விஜய் ஆண்டனிக்குக் கிட்டத்தட்ட படத்தில் கெளரவத்தோற்றம்தான். கொலையாளியைக் கண்டுபிடித்தாலும், ஹீரோவாக அவரது பங்கு படத்தில் மிகச் சொற்பமே! அவர் முழுநீள நாயகனாக நடிக்கும் படத்திற்கே, பொன்மனத்தோடு போதுமென்ற அளவிலேயே நடிப்பார். இப்படத்திலும் அதைத் தொடர்கிறார்.
ஒரு க்ரைம் த்ரில்லர் படமாகக் கொண்டு போய், சமூகத்தில் எள்ளலுக்கும் ஏளனத்திற்கும் உள்ளாக்கப்படும் ஒரு பாகுபாட்டினைத் தொட்டு, அது சம்பந்தப்பட்டவர்களை எவ்வளவு காயமுறச் செய்யும் எனப் படத்தை முடித்துள்ளார் லியோ ஜான் பால்.