

உசிலம்பட்டியைச் சேர்ந்த முப்பத்து மூன்று வயதான ராமச்சந்திரனுக்குக் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அம்பிகாவுடன் நிச்சயதார்த்தம் நிகழ்கிறது. ராமின் ராசிக்குக் கல்யாணமே ஆகாது என உறவினர்களும் ஊரார்களும் அவர் காதுபடக் கிண்டல் செய்தவண்ணம் இருக்க, அம்பிகாவுடனான திருமணத்திற்காக மிகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார் ராம். அவரது ராசியோ, விதியோ, இயற்கையோ, இயக்குநரின் திரைக்கதையோ ஏதோ ஒன்று விளையாட, குடும்பத்துடன் கோபிச்செட்டிப்பாளையத்திலேயே லாக்டவுனில் சிக்கிக் கொள்வதோடு கல்யாணமும் நின்று விடுகிறது. 90’ஸ் கிட்டான ராமின் வேதனை ஒரு முடிவுக்கு வந்ததா இல்லையா என்பதுதான் படத்தின்முடிவு.
கலகலப்பான படத்தின் முதற்பாதி ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் 90’ஸ் கிட்களுக்கே உரித்தான சோதனை நாயகன் ராமைப் போட்டு வாட்டுகிறது. ராமின் வேதனை பொறுக்காமல் அம்பிகாவின் தங்கை ராதா, ராமின் மீது காதல்வயப்படுகிறார். அக்காதலிலும் ஒரு முடிவை எட்ட முடியாமல் சிக்கல் எழ, நாயகனொரு தீர்க்கமான முடிவை க்ளைமேக்ஸில் எடுக்கிறார்.
வீடுகொளுத்தி எனும் பாத்திரத்தில், அதாவது உறவினர் எனும் பெயரில் அனைத்திலும் குறைகண்டு குத்திக் காட்டி எகத்தாளம் பேசும் நபராக அருள்தாஸ் நடித்துள்ளர். இது போன்ற உறவினர்களின் வாய்க்குப் பயந்தே பெரும்பாலோர் தங்களுக்கான வாழ்க்கையை வாழாமல் போய் விடுகின்றனர். எரிச்சல் அடைய வைக்கும் கதாபாத்திரத்திற்குக் கனகச்சிதமாகப் பொருந்தியுள்ளார் அருள்தாஸ்.
நல்ல நேரம் பார்த்துக் காரியத்தைத் தொடங்க வைக்கும் ப்ரோக்கராகக் கோடாங்கி வடிவேல் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். நாயகனின் நண்பராக நடித்துள்ள ரமேஷ் திலக்கும் தன் பங்கிற்குப் படத்தின் கலகலப்பைக் கூட்ட உதவியுள்ளார். நாயகிகளின் தாய்மாமனாக நடித்திருக்கும் முருகானந்தமும், ரமேஷ் திலக், கோடாங்கியுடன் இணைந்து என்டர்டெயின் செய்கிறார். குடிகார ராமின் பெரியப்பாவாக நடித்திருக்கும் சித்தன் K.G.மோகனும் நன்றாக அலம்பல் செய்துள்ளார். அம்பிகாவாக சுஷ்மிதா பட்டும், ராதாவாக மீனாட்சி தினேஷும் நடித்துள்ளனர். சுஷ்மிதா பட் அமைதியால் ஈர்த்தால், மீனாட்சி தினேஷ் தனது துடுக்குத்தனத்தால் ஈர்க்கிறார். இருவரும் படத்தின் அழகியலுக்கு உதவியுள்ளனர்.
ஒரே காட்சிதான் என்றாலும், அமாவாசையின் வாரிசு, கொரோனாவை விரட்ட வரும் கொங்கு சானிடைஸர் பெளர்ணமியாக வந்து லொள்ளு செய்யும் சத்யராஜ் ரசிக்க வைக்கிறார். ஏமாற்றம், எதிர்பார்ப்பு என பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நிறைவாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு. ஜாலியாக ரசித்துப் பார்க்குமளவு முதற்பாதியும், அருள்தாஸின் வாயிற்கு யாரும் பூட்டு போட மாட்டார்களா என்று இரண்டாம் பாதியும் பயணிக்கிறது. திருமணம் என்பது சமூக அழுத்தமாகத் திணிக்கப்படுகையில், கல்யாணம் செய்து கொள்வது யாருக்காக என்ற கேள்வியெழுப்பிப் பதிலளிக்க முனைந்துள்ளார் மருத்துவரும் இயக்குநருமான சண்முக பிரியன்.


