

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் ‘மை லார்ட் (My Lord)’ திரைப்படமாகும். பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் நன்றி நவில்தல் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில் பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், “சில படங்கள், நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம், நாம் அதை நன்றாகச் செய்யவேண்டும் என தோன்றும். ஒரு சில படங்கள் மட்டுமே இது வெறும் படம் கிடையாது, ஒரு இசையமைப்பாளராகவும் சரி, ஒரு மனிதனாகவும் இது நமக்கு ஒரு பெரிய பொறுப்பு, இதில் வேலையை மட்டும் முடித்தால் பத்தாது, இதை நாம் பதிவாகவும் அமைக்க வேண்டும் என இரு பொறுப்புகள் ஆகிவிடும். எப்போதுமே ராஜு முருகன் சார் எனக்குப் பாட்டு எழுதும் போதோ, இல்லை அவரோட படத்துக்கு நான் இசையமைக்கும்போதோ அந்தப் பொறுப்பை நான் உணர்ந்திருக்கிறேன். அவர் ஒரு ஸ்பெஷலான கிரியேட்டர், மை லார்ட் படத்துல ஒரு புதுவிதமான சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
அவருக்கே உரித்தான பொலிட்டிக்கல் சட்டயரை ரொம்ப ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும்படி கொண்டு வந்தது சர்ப்ரைஸிங்கா இருந்தது.மை லார்ட் படத்தை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி. டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில், தொடர்ச்சியாக சசி சாருடன் வெற்றியில் பங்கேற்பது ஒரு ஸ்பெஷலான தருணமாய் உணர்கிறேன்.
அம்பேத் சாருடன் நேரில் சந்தித்து பேசியதை விட ஃபோனில் பேசியது தான் அதிகம். இந்தப் படம் சமூகத்துக்கு ஒரு நல்ல விஷயத்தைச் செய்யக்கூடிய படம். ‘இந்தப் படத்தை நான் எடுத்துப் பண்றேன்’னு அவர் எடுத்த அந்த முயற்சி, இன்று வெற்றி என்ற புள்ளியில் வந்து நின்றதற்கு, அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படங்களின் கலெக்ஷனை நாம் கம்பேர் பண்ணலாம், ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி மனதில் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு படமாக மை லார்ட் இருக்கும். இப்படத்தில் வேலை செய்த இசைக் கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார், “படம் வெளியாகி இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் ‘தேங்க்ஸ் மீட் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று சொல்லி, எனக்கு ஒரு பெரிய ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தவர் சசிகுமார் சார். இந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாலிருந்து இன்று வரைக்கும், ‘இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும்’ என்று ஒரு தீர்மானத்தோடு தொடர்ந்து உழைத்து வருகிற இந்த மாதிரியான ஹீரோவை, உண்மையிலேயே நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல; மனிதநேயமும் மனிதாபிமானமும் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் சசிகுமார் சாருக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள். இந்த படத்தைப் பற்றி முன்வந்து பேசின வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், உள்ளத்திலேயே மனிதநேயத்தைச் சுமந்து பேசீன அருமையான நண்பர் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் என் நன்றிகள். எனக்கு, ஜிப்ஸியை விட இந்தப் படம் வெற்றிப் படம்தான்.நான் திருப்தியாக இருக்கிறேன்” என்றார்.
இயக்குநர் ராஜுமுருகன், “நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை, இந்த உலகம் ரொம்ப மாறியிருக்கிறது. ஒரு படத்தை எழுதத் தொடங்கும் இடத்தில் ஒரு எழுத்தாளரின் வேலை ஆரம்பிக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் இயக்குநரின் வேலை வருகிறது. அதற்குப் பிறகு ரிலீஸ், போஸ்ட்-புரடக்சன் என்று தொடர்கிறது. ஆனால் இன்றைக்குப் படம் ரிலீஸான பிறகும், ப்ரமோஷன் வரைக்கும் நிறைய விஷயங்களை நாமே கவனிக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு ரைட்டிங்குக்கு எவ்வளவு உழைப்போ, ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு உழைப்போ, அதே அளவு உழைப்பை இன்றைக்கு அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் கொடுக்க வேண்டியிருக்கிறது. நான் அடிப்படையில் ஒரு ஜர்னலிஸ்டாக இருந்ததால், முன்பெல்லாம் ப்ரமோஷன், இன்டர்வியூஸ் இதிலெல்லாம் அதிக ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால் இப்போ அது ஒரு பெரிய சவாலாக மாறியிருக்கிறது.
ஒரு படத்துக்கு எப்படி முழு மனசோடு வேலை செய்கிறோம், அதே தீவிரத்தோடு ப்ரமோஷனுக்கும் வேலை பண்ண வேண்டிய ஒரு சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இது நல்லதா, கெட்டதா என்ற விவாதத்தைத் தாண்டி—இந்த உலகம் மாறிக்கிட்டே இருக்கிறது என்பதையும், அதுக்கேற்ற மாதிரி நாமும் மாற வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் படைப்பில் எப்போதும் கூடவே இருந்து துணைநின்ற ஜேம்ஸ் சார், திங்க் மியூசிக் சந்தோஷ் சார்,இந்த படம் உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த இரா. சரவணன் உட்பட அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்” என்றார்.
நடிகர் சசிகுமார், “என்னுடைய நடிப்பை எல்லாருமே பாராட்டியதை கேட்கும்போது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னோட நடிப்பும், சைத்ரா நடிப்பும், அதுக்கப்புறம் குருசசோமசுந்தரம் உள்ளிட்ட பல சிறிய சிறிய கேரக்டர்ஸும் முதல் காட்சியிலிருந்தே பாராட்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு நடிகராக, என்னை இன்னொரு விதமாக அழகாக மாற்றிக் காட்டியிருக்கிறார் ராஜுமுருகன். அதுக்காக அவருக்கு நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லக்கூடிய அவரது மனது தான் பெரிய விஷயம். ராஜு முருகன் கொடுத்து வைத்தவர். ஒரு நல்ல இயக்குநரும், ஒரு நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
முதல் நாள் கலெக்ஷனைப் பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. ‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. அந்தப் படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள்மேல் இருக்கிறது. இப்படம் போய் சேர வேண்டிய இடத்திற்கு கண்டிப்பா போய்ச் சேரும். படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும், ஓடிடியிலும் வாங்கியதும், இதெல்லாமே ஒரு பெரிய வெற்றிதான். அதே போல சூர்யா சார் படம் பார்த்து, இந்தப் படத்தை ப்ரெசென்ட் பண்ணுறோம் எனச் சொன்னதுக்கும், அவருக்கும் அவரோட டீமுக்கும் என் மனப்பூர்வமான நன்றி” என்றார்.

