

தொடர் கொலைகள் நடப்பதைத் தடுக்க முடியாமல் தடுமாறுகிறார் காவல்தூறை அதிகார் சீத்தாராம். கிடைக்கின்ற துப்புகளை இணைத்து, இருவரை அணுகிக் கைது செய்தாலும், எதிர்பாராத ஒருவரே அனைத்துக் கொலைகளுக்கும் காரணமாக உள்ளார். அவரை எப்படி சீத்தாராமன் கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் முடிவு.
படத்தின் த்ரில்லிங் அம்சத்தைத் தனது இசையால் மிக அழகாகக் கொண்டு வந்துள்ளார் இசையமைப்பாளர் நவனீத் ஷாம். கொலை நடந்த ஒவ்வொரு வீட்டிலும், ஒரு சின்ன மர வீணை பொம்மை கிடைக்கிறது. அவ்விஷயத்தைத் தனது இசையால் சுவார்சியப்படுத்தியுள்ளார் நவனீத். படத்திற்கான உளநிலை அமைப்பதைக் (mood set) கச்சிதமாகத் தனது கோணங்களால் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஹேமந்த். நாயகன் விஜய ராகவேந்திராவுடன் இணைந்து, Seetharam Benoy Case No. 18 (2021), Case of Kondana (2024) எனும் படங்களைத் தொடர்ந்து மூன்றாம் முறையாகப் போலீஸ் கதையை எடுத்துள்ளார் இயக்குநர் தேவிபிரசாத் ஷெட்டி.
யதார்த்த பாணி த்ரில்லராகப் படம் அமையவேண்டும் என்பதற்காக, நாயகன் விஜய் ராகவேந்திராவைச் சோர்வாகக் காட்டியுள்ளனர். தொடக்கத்தில், சின்னச் சின்ன வலுவற்ற துப்புகளுக்கு எல்லாம் உற்சாகமாகிக் கொலையாளியை நெருங்கிவிட்டோம் என்கிறார். அப்படியில்லை எனப் பார்வையாளர்களுக்கு உள்ளங்கனி நெல்லிக்கனி போல் தெரிவதால், நாயகனின் திறனாய்வுத் திறன் மீது சலிப்பும் நம்பிக்கையின்மையும் எழுகிறது. இறுதி முடிச்சை அவர் அவிழ்க்கும் விதம் சுவாரசியப்படுத்தினாலும், அவர் அதே அறிவாற்றலைத் தொடக்கம் முதல் காட்டாமல் சிறுப்பிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார். எழுதி இயக்கியுள்ள தேவிபிரசாத் ஷெட்டி, மிகக் கனமான ஒரு கதையைத் தொட்டுள்ளார். ஆனால் அதைத் தொடக்கம் முதல் விறுவிறுப்பாகக் கொண்டு செல்லாததே படத்தின் குறை.
பால்யத்தில் ஏற்படும் வடு ஒருவனைக் காலம் முழுவதும் எப்படித் தொடரும் என படம் சொல்கிறது. அவனைப் போலவே, பாதிக்கப்படும் இன்னொருவனும் படத்தில் உள்ளான். அவ்விருவருக்கும் உள்ள முரணும் ஒற்றுமையும்தான், சீத்தாராமின் இந்த இரண்டாவது வழக்கிலுள்ள சுவாரசியம். அதே போல், எத்தகையை பழி பற்றியும் கவலை கொள்ளாத தந்தை ஒரு பக்கம், பழி வந்துவிடுமோ என மகளையே கொல்லும் தந்தை என படம் மனித மனங்களை ஆழமாக இல்லாவிட்டாலும் சற்றே நெருங்கியுள்ளதும் படத்தின் பலம்.


