

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின், காவேரி மூளை மற்றும் முதுகெலும்பு பிரிவு (KIBS – Kauvery Institute of Brain and Spine) தொடங்கி இரண்டாண்டாகிறது. இதுவரை 25000 நோயாளிகள் KIBS-ஆல் பயனடைந்துள்ளனர். தற்போது, ஒருங்கிணைந்த நரம்பியல் பராமரிப்பெனும் அணுகுமுறையால் நான்கு சிறப்புச் சிகிச்சையகங்களைத் தொடங்கியுள்ளனர். அவை, கால்-கை வலிப்பு சிகிச்சையகம் (Epilepsy clinic), பார்கின்சன்’ஸ் சிகிச்சையகம் (Parkinson’s clinic), முக சிகிச்சையகம் (Facial clinic), முதுகெலும்பு குறைபாடு சிகிச்சையகம் (Spine Deformity clinic) ஆகும். இச்சிகிச்சையகங்கள் பின்வரும் நோக்காடுகளில் கவனம் செலுத்தும்.
- கால்-கை வலிப்பு மற்றும் வலிப்புத்தாக்கக் கோளாறுகள் (Epilepsy and Seizure Disorders)
- பார்கின்சன்’ஸ் நோய் மற்றும் இயக்கக் கோளாறுகள் (Parkinson’s Disease and Movement Disorders)
- அசாதாரண முக வலி (Atypical Facial Pain)
- முதுகெலும்பு குறைபாடுகள் (Spine Deformities)
இந்தச் சிகிச்சையகங்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், பல்துறை நிபுணர்கள் ஆலோசனை அணுகுமுறையாகும். நோயாளிகளின் நிலை, நிபுணர்கள் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டுக் கூட்டாக விவாதித்து, ஒரு பராமரிப்பு திட்டத்தை இறுதி செய்து, துல்லியமான, முழுமையான தனிப்பட்ட சிகிச்சையை உறுதி செய்கிறார்கள். பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கூட்டாக ஒவ்வொரு பிரச்சனையையும் மதிப்பீடு செய்து, சிகிச்சை அளித்துக் கண்காணிக்கும் ஒரு முன்னோடி அணுகுமுறையாகும். ஆரம்ப ஆலோசனையிலிருந்து இயல்புமீட்பு வரை, நரம்பியல் நோயின் மருத்துவ மற்றும் உளவியல் பரிமாணங்களை நிவர்த்தி செய்யும் நெறிப்படுத்தப்பட்ட, குழு அடிப்படையிலான பராமரிப்பிலிருந்து நோயாளிகள் பயனடைகிறார்கள்.
மேலும், பக்கவாத சிகிச்சையில் செயற்கை நுண்ணறவின் உதவியோடு மேம்படுத்தப்பட்ட பராமரிப்பை அளிக்கின்றது KIBS. செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியால், ஆரம்பநிலையிலேயே பக்கவாதத்தைக் கண்டறிந்து, விரைவாகச் சிகிச்சையளிப்பதன் மூலமாக நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதோடு, இயல்புமீட்பை இலகுவாக எட்ட இயலும். நோயறிதலைத் துரிதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல மருத்துவப் பிரிவுகளைச் செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் ஒருங்கிணைக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது காவேரி மருத்துவமனை. திருப்புமுனையை ஏற்படுத்தும் இத்தகைய மருத்துவ அணுகுமுறை, நரம்பியல் துறையில் முதல் முறையாக நிகழ்த்தப்பட்டிருக்கும் முன்னோடி முயற்சியாகும். மேலும், காவேரி மருத்துவமனை மற்ற மருத்துவமனைகளுடன் இணைந்து ஒரு பொதுத்தளத்தின் வாயிலாக, செயற்கை நுண்ணறிவின் மூலமான துரித நோயறிதல் சேவையையும் முன்னெடுக்கிறது. இதுவரை மூன்று மருத்துவமனைகள், காவேரி மருத்துவமனையுடன் இணைந்துள்ளது.
உலக பக்கவாதம் அமைப்பின் கூற்றுப்படி, 2050 ஆம் ஆண்டுக்குள், உலகளாவிய பக்கவாத பாதிப்பு, 87% குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளில் (LMICs) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாகப் பக்கவாதம் விளங்குகிறது. மேலும் 25 வயதுக்கு மேற்பட்ட 4 பேரில் ஒருவர், தங்கள் வாழ்நாளில் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இதய நோயளவுக்கு, மக்களிடையே பக்கவாதத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை. எனக்குத் தெரிந்த படித்த நபர் ஒருவருக்குப் பேச முடியாமல் குழற, அவர் அதைக் கண்டுகொள்ளாமல், ‘மெதுவாகப் பார்த்துக்கலாம்’ என அலட்சியமாகத் தள்ளிப் போட்டுவிட்டார். ஆனால் தள்ளிப் போடும் ஒவ்வொரு 30 நொடிக்கும், 30 ஆயிரம் மூளை செல்கள் இறக்கின்றன. பேச்சு குழறினாலோ, வாய் கோணினாலோ, நடையில் தடுமாற்றம் ஏற்பட்டாலோ, உடனடியாக ஸ்பெஷலிட்டைப் பார்க்கணும். Be Fast” என்றார் காவேரி மூளை மற்றும் முதுகெலும்பு பிரிவின் குழு வழிகாட்டியும், இயக்குநருமான மருத்துவர் K. ஸ்ரீதர்.


