
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் கமர்ஷியல் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் ‘அகத்தியா’ திரைப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி முதல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. வரும் 28ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகை ராஷி கண்ணா, ”நான் ஏற்கனவே ‘அரண்மனை 3’ , ‘அரண்மனை 4’ போன்ற ஹாரர் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தத் திரைப்படத்தில் ஹாரருடன் புதிய எலிமெண்ட்டும் இருக்கிறது. அதற்காக இயக்குநர் பா. விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் பா். விஜயைப் பாடலாசிரியராகத் தெரிந்திருக்கும். ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு அவர் இயக்குநராகவும் வெற்றி பெறுவார். படத்தில் புது எலிமென்ட் (element) கிளைமாக்ஸில் இடம் பிடித்திருக்கிறது. புது தொழில்நுட்பத்துடன் இணைந்து அது உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஜீவா உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம். அவருடன் தொடர்ந்து படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்றார்.
இயக்குநரும் நடிகரும் பாடலாசிரியருமான பா. விஜய், ”அகத்தியா, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மதிப்புமிகுந்த திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்நிறுவனத்துடன் வேம் இந்தியா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.
இது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கொண்ட தருணம். இந்தப் படத்தின் கதை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து மிகப் பெரிய தேடல் இருந்தது. முதலில் இந்தக் கதையை எப்படி ஜனரஞ்சகமாகச் சொல்ல வேண்டும், அப்படி வெகுஜன ரசனையுடன் சொல்ல வேண்டும் என்றால் வலிமையான தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணி தேவை என்பதை உணர்ந்தேன். அதனால் கதை எழுதத் தொடங்கும் போது இது வழக்கமான ஹாரர் படமாக இல்லாமல், அதிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு ஹாரர் ஃபேண்டஸியாகவும் உருவாக்க வேண்டும் என எழுதத் தொடங்கினேன். ஏனெனில் நான் சொல்ல வரும் கன்டென்ட் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும் என விரும்பினேன். இதனால் கதையின் ஒரு மிகப்பெரிய பகுதியை பீரியட் ஃபிலிமாக காட்ட வேண்டிய சூழல் கதைக்களத்தில் ஏற்பட்டது.
திரைக்கதையை எழுதி முடித்த பிறகு இதனைத் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் பிரம்மாண்டமான பொருட்செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளர்கள் தேவை. மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனம், நட்சத்திர நடிகர்களின் பிஸினஸைப் பற்றிக் கவலைப்படாமல் சொல்லவரும் கன்டென்ட்டைப் புரிந்து கொண்டு தயாரிக்கும் தயாரிப்பாளர்களால் மட்டுமே இதனைத் தயாரிக்க இயலும். அப்படி ஒரு தயாரிப்பாளரை நானும் ஒளிப்பதிவாளர் தீபக் குமாரும் தேடத் தொடங்கினோம்.
இந்தத் தருணத்தில் தான் நடிகர் ஜீவாவின் தொடர்பு கிடைத்தது. அவருடன் ஏற்கனவே ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தேன். அந்த நட்பின் காரணமாக அவரிடம் இந்தப் படத்தின் கதையை விவரித்தேன். ஜீவாவும், ‘ஹாரர் படமா.. வேண்டாமே..!’ எனத் தயங்கினார். ஆனால் நானோ, ‘இது ஹாரர் படம் இல்லை. ஹாரர் ஃபேண்டஸி படம். இந்தத் திரைப்படத்தில் நல்ல விஷயம் இருக்கிறது. அது மக்களிடம் சென்றடைய வேண்டும். இது ஒரு ஹாரர் அட்வென்ச்சர் படமும் கூட’ என்றேன். அதன் பிறகு அவரும் தயாரிப்பாளரைத் தேடுகிறேன் என்றார்.
பின்னர், ‘இந்தக் கதையை நம்பி தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார், வாருங்கள் அவரை சந்திப்போம்’ என்று அழைத்துச் சென்ற இடம் தான் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அவரை அவருடைய வீட்டில் சந்தித்தோம். கதையை முழுவதுமாகக் கேட்டதும் தயாரிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்தார். நாங்கள் கேட்டது, கேட்க நினைத்தது, கேட்கத் தயங்கியது, இதையெல்லாம் கேட்கலாமா என்று யோசித்தது என அனைத்தையும் அவராக முன்வந்து செய்து கொடுத்தார். இந்தத் திரைப்படத்தில் பான்-இந்திய நட்சத்திர நடிகையான ராஷி கண்ணா இடம் பிடித்தார். அதன் பிறகு மற்றொரு அழுத்தமான வேடத்தில் நடிக்க அர்ஜுன் பொருத்தமாக இருப்பார் என்று சொன்னோம். அவர் இந்தப் படத்தில் இணைந்தார். அதன் பிறகு சில ஹாலிவுட் நட்சத்திர நடிகர்கள் நடித்தால் கதையில் நம்பகத்தன்மை அதிகம் இருக்கும் என்று சொன்னேன். மெடில்டா எனும் ஹாலிவுட் நடிகையும், ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த எட்வர்ட் சொனன் பிளேக் என்ற நடிகரும் இணைந்தார்கள். அதன் பிறகு யோகி பாபு, வி டி வி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி , ராதாரவி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் பணியாற்றினர். இந்தப் படத்தின் கதைக்களத்திற்காக ஏராளமான அரங்குகள் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அனைத்தும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்க வேண்டியதாக இருந்தது. அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார்.
டாக்டர் ஐசரி கணேஷின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் இயக்குநர்களுக்கு மிகப்பெரிய படைப்புச் சுதந்திரம் கிடைக்கும். இயக்குநர்கள் ஒரு காட்சிக்கு மயில் தோகை வேண்டும் என கேட்டால் தயாரிப்பாளர் மயில் ஒன்றைக் கொண்டு வந்து தருவார். இதுதான் அவரின் பண்பு. இதுதான் அவர் சினிமா மீது வைத்திருக்கும் கட்டற்ற நேசம், அளவற்ற காதல். இதைப் பார்த்து நான் பல தருணங்களில் வியந்து இருக்கிறேன்.
65 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். படத்தொகுப்புப் பணிகளை நிறைவு செய்த பிறகு 90 நிமிடங்களுக்கு வி எஃப் எக்ஸ் பணிகள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்காக ஓராண்டு காலம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டு ஒத்துழைப்புடன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. அந்தப் பணிகளையும் அண்மையில் நிறைவு செய்தோம். உச்சகட்ட காட்சி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்தக் காட்சிக்கான பணிகளை ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்சர்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் பணிகளை மேற்கொண்ட முன்னணி நிறுவனத்திடம் வழங்கினோம். இந்த இறுதிக் காட்சியில் அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் கூடிய சண்டைக் காட்சியை பிரம்மாண்டமாக அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் காட்சி படத்திற்கு வலிமை சேர்க்கும் என நம்புகிறேன்.
‘ஒரு இயக்குநர் எழுதிய திரைக்கதை முழுவதுமாக காட்சி வடிவில் செதுக்கப்பட்டிருந்தால், அந்தப் படம் இயக்குநருக்கு திருப்தி அளித்தால், அதுதான் நல்ல படைப்பாக உருவாகும்’ என என்னுடைய குருநாதர் கே. பாக்யராஜ் சொல்வார். இந்தப் படத்தின் முதல் பிரதியைப் பார்வையிடும் போது எனக்கு அந்த மனநிறைவு ஏற்பட்டது. இதற்குக் காரணம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் தான். அவருக்கு வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையின் அளவில் நன்றியைச் சொன்னாலும் போதாது.
நடிகர் அர்ஜுன் நடிகர் மட்டுமல்ல, சிறந்த இயக்குநரும் கூட. அவருடைய இயக்கத்தில் உருவான படத்திற்குப் பாடல்கள் எழுதுவது என்பதே சவாலான பணி. அவரை வைத்து இயக்குவது என்பது இன்னும் கூடுதலான சவால் மிக்கது. படப்பிடிப்புத் தளத்திற்கு வரும்போது அன்றைய தினம் படமாக்கப்படும் காட்சிகளின் முழு விவரத்தையும் கையில் வைத்திருப்பார். அவரிடம் படம் தொடர்பான காட்சி தொடர்பான ஆரோக்கியமான கேள்விகள் இருக்கும். அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளித்து விட்டால் அவர் தன் பங்களிப்பை முழுமையாக அளித்து விடுவார். படப்பிடிப்பிற்கு முதல் நாள் வரும் போது தான் இத்தகைய வினாக்களைக் கேட்பார். அதற்கு நாங்கள் பதில் அளித்து விட்டோம் என்றால் முழுப் படப்பிடிப்பிற்கும் அவருடைய ஒத்துழைப்பு சிறப்பானதாக இருக்கும். இந்தப் படத்தில் கதையின் வேர் பகுதியில் இடம்பெறும் கதை களத்தில் அழுத்தமான வேடத்தில் அர்ஜுன் நடித்திருக்கிறார். அவருக்கு நான் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் இந்தப் படத்தில் திறமை மிக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியும் அமைந்தது. ஒளிப்பதிவாளர் தீபக் குமார், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கலை இயக்குநர் சண்முகம், சண்டைப் பயிற்சி இயக்குநர் கணேஷ், ஆடை வடிவமைப்பாளர் சாய், பல்லவி, டீனா ரோசாரியோ என பலரும் எனக்குப் பக்க பலமாக இருந்து பணியாற்றினார்கள். இவர்களுடன் யுவன் ஷங்கர் ராஜாவும் எனக்காக சிறப்பான பின்னணி இசையை அமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்காக அவருடைய பிரத்தியேகமான தீம் மியூசிக் இடம் பிடித்திருக்கிறது. இதுவும் ரசிகர்களை வெகுவாகக் கவரும்.
‘அகத்தியா’ இரண்டேகால் மணி நேரம் மனதை ரிலாக்ஸாக வைக்கும் ஜனரஞ்சகமான படம் என்பதுடன் குடும்பத்தினருடன் ரசிக்கும் வகையில் தயாராகி இருக்கிறது. அழகான தமிழ் வசனங்கள், இனிமையான பாடல்கள், அனைத்துத் தரப்பினரும் தற்போது ரசிக்கும் ஹாரர் எலிமெண்ட்ஸ்கள், இத்துடன் ஃபேண்டஸி என்ற புதிய எலிமென்ட்டையும் இணைத்து உருவாகியிருக்கிறோம். அதனால் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பது என்னுடைய அழுத்தமான நம்பிக்கை.
படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பும் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயனளிக்க வேண்டும் எனக் கருதுகிறேன். இதுதான் படைப்பின் இலக்கணமும் கூட. அத்தகைய முயற்சியில்தான் ‘அகத்தியா’ உருவாகி இருக்கிறது. அழகானதொரு கருவைச் சுமந்து உங்களை நோக்கி வரும் 28ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
நான் திரைத்துறைக்குப் பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, நடிகராகி, இயக்குநராகித் தயாரிப்பாளராகி என 27 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்ட விஷயம் ஒன்றுதான். சினிமாவில் வெற்றி என்பது கூட்டு முயற்சி. சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை. கூட்டு முயற்சியில் தான் ஒரு கலைஞரின் வெற்றி அடங்கியிருக்கிறது” என்றார்.