

அழகான கிராமத்து வாழ்வியலைச் சித்தரிக்கும் படமாகக் கவர்கிறது வேம்பு.
சிலம்பாட்டத்தில் சாதிக்கவேண்டும் என்பதும், அதன் மூலமாக அரசு வேலைக்குச் செல்லவேண்டும் என்பதும் வேம்பு எனும் இளம்பெண்ணின் ஆசை. அதற்கு உற்றதுணையாக இருக்கும் வேம்புவின் தந்தை, மூப்பின் காரணமாக மகளுக்குக் காலாகாலத்தில் கல்யாணம் செய்து வைக்கவேண்டுமென எண்ணி, தங்கை மகன் வெற்றிக்கு மகளைக் கட்டிக் கொடுக்கிறார் வேம்புவின் தந்தை. கல்யாணமான அன்றே வெற்றிக்குப் பார்வை பறிப் போக, வேம்புவின் வாழ்க்கை எத்தகைய சிக்கல்களுக்கு உள்ளாகிறது என்றும், அதிலிருந்து அக்குடும்பம் மீண்டதா என்பதே படத்தின் கதை.
A.குமரனின் ஒளிப்பதிவு அட்டகாசமாய் அமைந்துள்ளது. கிராமம் என்றாலே தேனி, தஞ்சை என பெரும்பாலும் தமிழ் சினிமா தஞ்சம் அடையும். வறண்ட பூமி என்றால் ராம்நாடு சென்றுவிடும். இப்படத்தில் கிருஷ்ணகிரி – குப்பம் (ஆந்திரம்) சாலை மருங்கே உள்ள உட்புற கிராமங்களைக் கதையின் களமாகக் கொண்டுள்ளது. நெடிதுயர்ந்த மலை, கொட்டி வைக்கப்பட்டது போன்ற பாறைகளின் இடையே மெல்லிய கோடு போல் பாதை என வேம்பு படத்தின் நிலபரப்பு ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. A. குமரன், தனுஷின் தங்கமகன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேம்புவின் தந்தையாக தியேட்டர் லேப்ஸ் புகழ் ஜெயராவும், அம்மாவாக ராதாமணியும் நடித்துள்ளனர். ராதாமணி, சித்தா படத்தில் நீதிபதியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேம்புவின் கணவர் வெற்றியாக மெட்ராஸ் படப்புகழ் ஹரிகிருஷ்ணன் நடித்துள்ளார். முதற்பாதியில் அவரது கதாபாத்திரம் சரியாக எழுதப்படாததால், அதிக அழுத்தம் ஏற்படுத்தாத ஹரிகிருஷ்ணன், கண் பார்வை இழந்தவராக இரண்டாம் பாதியில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
தனது படத்தின் மையக்கருவாகச் சமூகநீதியைத் தொட்டுள்ளார் அறிமுக இயக்குநர் V. ஜஸ்டின் பிரபு. பெண் கல்வியையும், பெண்களுக்குத் தற்காப்புக் கலை அவசியம் என்ற கருத்தையும் அழுத்தமாகப் பதிந்துள்ளார். வேம்புவாக நடித்துள்ள ஷீலா, அப்பாத்திரத்திற்குக் கச்சிதமான தேர்வு. கனவுகளைத் துரத்த வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் வேம்பு, தந்தையை எண்ணி தன் முடிவை மாற்றிக் கொள்கிறார். சூழ்நிலை சந்தர்ப்பங்களால் அவரது வாழ்வு போராட்டமாக அமைந்தாலும், அதை வெற்றிகரமாகச் சமாளித்து சுபமாக்கிக் கொள்கிறார் வேம்பு.


