Shadow

விரூபாக்‌ஷா – மிஸ்டிக் ஹாரர் த்ரில்லர்

தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் 5 ஆம் தேதியன்று தமிழில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘விரூபாக்‌ஷா’. இந்தத் திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, ‘காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். தமிழ்ப் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுத, மிஸ்டரி த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என். பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தைத் தமிழில் ஸ்டுடியோ க்ரீன் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா வெளியிடுகிறார்.

ஏப்ரல் 21ஆம் தேதியன்று தெலுங்கில் வெளியான இந்தத் திரைப்படம், வெளியான ஒரு வாரத்திற்குள் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என். பிரசாத், இயக்குநர் கார்த்திக் வர்மா, நடிகை சம்யுக்தா, படத்தின் நாயகனான சாய் தரம் தேஜ் கலந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் பிரசாத், ”தமிழில் திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என முப்பத்தைந்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், அகத்தியன் உள்ளிட்ட பலருடன் பணியாற்ற விரும்பினேன். ஆனால் சரியான வாய்ப்பு அமையவில்லை. தற்போது ‘விரூபாக்‌ஷா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறேன். இந்தத் திரைப்படத்திற்குக் கதை தான் நாயகன். தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், ”இந்தத் திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தெலுங்கில் வெளியான அன்றே பார்த்தேன். இரண்டேகால் மணி நேரத்திற்கு ஒரு புதிய உலகத்திற்குச் சென்று வந்த அற்புதமான அனுபவத்தை அளித்தது. தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என். பிரசாத் கதையின் மீது நம்பிக்கை வைத்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ‘புஷ்பா’ இயக்குநர் சுகுமாரின் திரைக்கதை, அறிமுக இயக்குநர் கார்த்திக்கின் இயக்கம், சாய் தரம் தேஜ் மற்றும் சம்யுக்தாவின் நடிப்பு என அனைத்தும் நேர்த்தியாக இருந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னைத் தொடர்பு கொண்டு இந்தத் திரைப்படத்தைத் தமிழில் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் இந்தத் திரைப்படம் தெலுங்கில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதே போன்ற வெற்றியைத் தமிழிலும் சாத்தியமாக்க வேண்டும் என ஞானவேல்ராஜா விரும்பினார். இந்தத் திரைப்படம் ‘அருந்ததி’ மாதிரி கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம். தமிழ் ரசிகர்களுக்கு மிஸ்டிக் ஹாரர் த்ரில்லர் படமான ‘விரூபாக்‌ஷா’ நிச்சயமாக பிடிக்கும். ‘விரூபாக்‌ஷா’ எனும் டைட்டில் பவர்ஃபுல்லாக இருக்கிறது. தமிழில், அருந்ததி முதல் ஆர்ஆர்ஆர் படம் வரை ஏராளமான படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இந்த ‘விரூபாக்‌ஷா’ படமும் இடம்பெறும்” என்றார்.