Shadow

கெணத்த காணோம் விமர்சனம்

தமிழில் அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர் தண்ணீர்’ நாவல் தாகத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய தண்ணிகரற்ற ஒரு படைப்பாகும். மேலும் தண்ணீர் தண்ணீர் என்ற பழைய திரைப்படமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக தாகத்தை முன் வைத்த படைப்புகள் என்றாலே ஓர் உணர்ச்சிகரமான பிணைப்பு ஏற்படும். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா தண்ணீருக்கான தாகத்தை மையப்படுத்தியே இந்தத் திரைக்கதையை எழுதியுள்ளார். மூலக்கதை நடிகர் ஆறுபாலா கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிறு கிராமம் ஒன்றில் கோவில் பூசாரியாக இருக்கிறார் யோகிபாபு. அவர் தன் காதலியைக் கரம்பிடிக்க வேண்டும் என்ற தாகத்தில் தவிக்க, ஒருபுறம் ஊரே தண்ணீர் வேண்டித் தவிக்கிறது. இச்சூழலில் யோகிபாபுவின் வீட்டின் முன் கிணறு தோன்றினால் தண்ணீர் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நிலை வருகிறது. யோகிபாபுவும் ஊருக்காகச் சம்மதிக்கிறார். ஆனால் கிணற்றைத் தோண்டும் போது அதிர்ச்சியை ஏற்படுத்தும்வண்ணம் ஒரு பொருள் கிணற்றில் தென்பட, ஒட்டுமொத்த அரசாங்கத்தின் பார்வையும் ஊர்மீது திரும்புகிறது. அதன்பின் நடக்கும் அரசியல் சூழ்ச்சியும், அதிகார வர்க்கத்தின் இரக்கமற்ற தன்மையும் ஊரை எப்படியெல்லாம் படுத்தின என்பதும், யோகிபாபு அதற்கு என்ன எதிர்வினை செய்தார் என்பதுவுமே படத்தின் கதை

கதையின் நாயகன் யோகிபாபு ஒரே டோனில் நடிப்பை மெயின்டெயின் பண்ணியுள்ளார். சில இடங்களில் அது எடுபடாமல் போகிறது. நாயகியாக லவ்லின் அட்டகாசமான தேர்வு. கண்களிலே பாதி நடிப்பைக் கொடுத்து விடுகிறார். பிற நடிகர்கள் அவர் முன் ஸ்கோர் செய்வதைத் தன் நல்ல நடிப்பால் தடுத்தும் விடுகிறார். ரேச்சல் நெகட்டிவ் ரோலில் அசத்தியுள்ளார். ராமகிருஷ்ணனுக்குப் பெரிய பாத்திரம் இல்லை என்றாலும் ஒகே ரகம் எனலாம். அவரும் அந்தப் பாத்திரத்திற்கு இது போதுமென்று நடித்துள்ளார். ஊரில் சில லைவ் ஆன மனிதர்கள் பின்னியெடுத்துள்ளனர்.

நிவாஸ் கே. பிரசன்னா படத்தை தன் இசையால் தூக்கிச் சுமந்துள்ளார். பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே கிணத்திற்கு ஆழம் சேர்க்கிறது. தியாகராஜனின் ஒளிப்பதிவு கிணற்றை அழகழகான ஷாட்களால் நிறைக்கிறது.

படம் பேச வந்த முக்கியமான பிடியில் இருந்து விலகி விலகிப் பயணிப்பது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. லாஜிக் கேள்விகள் கிணற்றின் ஆழத்தை விட நீளம். இருந்தாலும் சிற்சில புதிய காட்சிகள், இதுவரை திரையில் கண்டிராத சில மனிதர்களின் தரிசனம் போன்றவற்றால் படம் கொஞ்சம் ரசிக்கும்படியாகவே பயணிக்கிறது.

– வெண்பா தமிழ்