
வேலாயுதம் விமர்சனம்
வேலாயுதம் - நவீனத்துவத்தால் சோடைப் போயிருக்கும் தமிழ்க் கலாச்சாரம், வீரம் மற்றும் இன்னபிற போன்றவைகளைத் தட்டி எழுப்பும் ஓர் உன்னத திரை முயற்சி. குறியீடான படத்தின் தலைப்பில் இருந்தே அதை உணரலாம். வேல் பண்டையத் தமிழர்களின் ஆயுதம். வேலாயுதன் என்பது முருகனைக் குறிக்கும். முருகன் தமிழ்க் கடவுள்; வேலாயுதம் தமிழ்ப் படம். ஒவ்வொருவருக்கு உள்ளும் வேலாயுதம்(கடவுள்) வீற்றிருக்கிறார் என்ற வேதாந்த சாரத்தினை படத்தின் இறுதியில் நாயகனின் வசனமாக வைத்து மக்களை விழிப்புற செய்கிறார்கள்.பவுனூர் என்னும் கிராமத்தில் பாசக்கார அண்ணன், தங்கை வாழ்கிறார்கள். மனிதர் உணர்ந்துக் கொள்ள அவர்களுடையது மனித பாசம் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது. புனிதமானவர்களின் வாழ்க்கையில் சோதனைக்கு பஞ்சமிராது. அப்படித் தான் அண்ணன், தங்கை இருவரும் சென்னைக்கு பயணிக்கும் பொழுது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் அவர்கள் வாழ்க்கையில் சோதனை நேர்கிறது...















