
ஆடுகளம் விமர்சனம்
ஆடுகளம் - விளையாடுபவர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள், நடுவர்கள், ரசிகர்கள், ஆடுகளத்தினைப் பராமரிப்பவர்கள் என ஆடுகளம் வகை வகையான மனிதர்களை எப்பொழுதுமே தன்னுடன் வைத்திருக்கும். அதனாலேயே ஆடுகளத்தின் ஆரவாரத்தினை, ஆளரவமற்ற இரவிலும் உணர முடியும். காரணம் மனிதர்கள் அனைவரும் சதா விளையாடிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆடுகளங்கள் தான் ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. வெற்றிமாறன் சேவல் சண்டை நடக்கும் திடல், அத்திடலில் உள்ள மனிதர்களின் மனம் என இரண்டு ஆடுகளத்தினைத் தனது படத்தில் காட்டியுள்ளார்.பேட்டைக்காரர் தயார்ப்படுத்தும் சேவல்களும், அவைப் பெறும் வெற்றிகளும் அப்பிராந்தியத்தில் அவருக்கென ஒரு தனி செல்வாக்கை ஏற்படுத்துகின்றன. காவல்த் துறை அதிகாரியான ரத்தினசாமி தனது தாயாரின் பழம்பெருமை புலம்பல்களைப் பொறுக்க முடியாமல், தாயாரின் கடைசி ஆசையாக எண்ணி பேட்டைக்காரருடன் சேவல் சண்டைக்கு ஒரு யு...











