Shadow

சட்னி சாம்பார் | இயக்குநர் ராதாமோகனின் 20 ஆம் ஆண்டு

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான நகைச்சுவை சரவெடி வகைமையில் உருவாகியுள்ள சீரிஸ், ‘சட்னி சாம்பார்’. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது. வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது. அஜீஸ் அசோக் இசையமைத்துள்ள மூன்றாவது வெப்சீரிஸ் இது. அவரது இசையில், ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இரண்டாவது வெப் சீரிஸ் இது.

நடிகர் இளங்கோ குமரவேல், “இயக்குநர் ராதா மோகன் திரைக்கு வந்து 20 வருடங்கள் கடந்திருக்கிறது. அவரது முதல் படத்திலும் நான் இருந்தேன். அவரது முதல் சீரிஸிலும் இருக்கிறேன். மகிழ்ச்சி. ஆர்ட் டைரக்டர் கதிர், ரைட்டர் பொன் பார்த்திபன் என நண்பர்கள் அனைவரும் அவரோடு இத்தனை வருடம் இணைந்து பயணித்து வருகிறோம். அன்று எப்படி எனர்ஜியோடு இயங்கினாரோ, அதே எனர்ஜியோடு இன்றும் இயங்குகிறார். நடிக்கும் போது பொறுப்பை நம்மிடம் கொடுத்துவிட்டு, வேடிக்கை மட்டுமே பார்ப்பார். நமக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து நடிக்க வைப்பார். அவரது சிறப்பு அம்சம் அது, அவருடன் வேலை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த சீரிஸை உருவாக்க மிகுந்த ஒத்துழைப்பு தந்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் ஹாட்ஸ்டாருக்கும் எனது நன்றி” என்றார்.

நடிகர் நிதின் சத்யா, “நான் வாய்ப்பு கேட்டு ராதா மோகன் சாரிடம் சென்றேன். ‘ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கிறது செய்கிறாயா?’ என்று கேட்டார். அதே கதாபாத்திரத்தைக் கொஞ்சம் டெவலப் செய்து, மிகப் பெரிய பாத்திரமாக்கி, என்னை இதில் நடிக்க வைத்திருக்கிறார். என்னுடன் நடித்த இளங்கோ குமரவேல் சார், வாணி போஜன், யோகி பாபு, சந்திரன் என எல்லோருமே மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். பிரசன்னா மிக அருமையாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார், இசையில் அஜீஸ் அசத்தி இருக்கிறார். பொன் பார்த்திபன் மிக அருமையான வசனங்கள் தந்திருக்கிறார்” என்றார்.

நடிகர் கயல் சந்திரன், “இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு சீரிஸில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு எனது நன்றிகள். ராதா மோகன், ‘சார், ஐ லவ் யூ சார். என்னை ஒரு நடிகனாகப் பயன்படுத்தியதற்கு நன்றி’. என்னுடன் நடித்த அத்தனை பேரும் மிக அற்புதமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்” என்றார்.

நடிகை மீரா கிருஷ்ணன், “இது நான் நடிக்கும் முதல் வெப்சீரிஸ். இந்தக் கதாபாத்திரத்தைத் தந்த இயக்குநர் ராதா மோகன் சாருக்கு நன்றி. கிட்டத்தட்ட அவரை நாங்கள் லவ் பண்ணவே ஆரம்பித்து விட்டோம். அவர் எப்படி வேலை வாங்குகிறார் என்றே தெரியாது, நடிகர்களை இயல்பாக வைத்து, மிக அற்புதமாக வேலை வாங்கி விடுவார். ஜாலியாக ஒரு ஃபேமிலியில் இருப்பது போலவே தான் இருந்தது. இங்குள்ள அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி” என்றார்.

நடிகை வாணி போஜன், “ராதா மோகன் சாருடன் நான் இரண்டாவது முறையாக வேலை பார்க்கிறேன். ‘சட்னி சாம்பார்’ சீரிஸ் மிக அற்புதமாக வந்துள்ளது. ராதா மோகன் சார் ஐ லவ் யூ. என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் எனது அன்புகள். இந்த சீரிஸ் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.

ஹாட்ஸ்டார் சார்பாகப் பேசிய பிரதீப் மில்ராய், “ஹாட்ஸ்டாரில் பதினைந்துக்கும் மேற்பட்ட சீரிஸ் தயாரித்து வருகிறோம். நிறைகுடம் எப்பொழுதும் தளும்பாது என்பது ராதா மோகன் சாருடன் வேலை பார்க்கும் போது தான் தெரியவந்தது. ஊட்டியில் படப்பிடிப்பாகட்டும் டிஸ்கஷனாகட்டும் பல ஸ்டார்களை ஒன்றிணைத்து ஷூட்டிங்காக இருக்கட்டும், எந்த ஒரு சலனமும் இல்லாமல் மிகச் சிறப்பாகப் படப்பிடிப்பை நடத்துவார். அவருக்குள் இத்தனை காமெடி இருக்கிறது என்றே தெரியாது. மிக மிக இயல்பாக இருப்பார். யோகிபாபு மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு இது முதல் வெப் சீரிஸ். ராதா மோகன் சாருக்கும் இது முதல் வெப் சீரிஸ். மிக அற்புதமாக வந்துள்ளது. அத்தனை நடிகர்களும் மிக அற்புதமான உழைப்பைத் தந்திருக்கிறார்கள். பிரசன்னா மிக பிஸியான ஒளிப்பதிவாளர். ஆனால் இந்த சீரிஸில் பணியாற்றித் தந்ததற்கு நன்றி. அஜீஸ் நல்ல இசையைத் தந்துள்ளார். இந்த சீரிஸை உருவாக்கித் தந்த வேல்ஸ் நிறுவனத்திற்கு என்னுடைய நன்றிகள்” என்றார்.

கலை இயக்குநர் கதிர், “இயக்குநர் ராதா மோகனுடன் பணியாற்றுவது மிக மகிழ்ச்சியானதாக இருக்கும். அவருடன் பணியாற்றும் போது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். நான் இயக்குநர் ஹரி உடன் அடிதடி, சண்டை, ரத்தம், போன்ற காட்சிகள் என பணிபுரிந்து கொண்டிருப்பேன். ஆனால் இவருடன் வந்து பணியாற்றும் போது மனது இலகுவாகிவிடும். ஆரம்பகால படங்களிலிருந்து இவருடன் பணியாற்றி வருகிறேன். திடீரென ஒரு நாள் கூப்பிட்டு, ‘ஒரு விமானத்தை செட் போட முடியுமா?’ என்று கேட்டார். ‘உனக்கு என்ன பைத்தியமா?’ என்று கேட்டேன். ஆனால் கதையைச் சொல்லி, விமான செட் போடச் சொன்னார். அந்த விமான செட் போட்டது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இன்று வரை நான் பல படங்களில் வேலை பார்த்து இருக்கிறேன், ஆனால் இது மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. விமானத்தை உருவாக்கியது நல்ல அனுபவமாக இருந்தது. ராதா மோகனின் முத்திரை காமெடிகள் இந்த சீரிஸில் இருக்கிறது” என்றார்.

எழுத்தாளர் பொன் பார்த்திபன், “உப்புக் கருவாடு படத்தில் என்னை எழுத்தாளராக்கி அழகு பார்த்தார் ராதா மோகன் சார். இப்போது இந்தப் படைப்பின் மூலம் சீரிஸிற்கும் என்னைக் கூட்டி வந்துள்ளார். இந்த சீரிஸ் திரையிட்டபோது, நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எங்கெல்லாம் சிரிக்கிறீர்கள் எனப் பதட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். நீங்கள் சிரிக்க ஆரம்பித்தவுடன் தான் எங்களுக்குப் பயம் விலகியது” என்றார்.

இயக்குநர் ராதா மோகன், “திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறேன் என்கிறார்கள். 20 ஆண்டுகளைக் கடந்து இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தந்த ஆதரவு தான் காரணம். இந்த சீரிஸில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எங்களுக்காக அவர் மிக பிஸியான நேரத்தில் பத்து நாட்கள் கால்ஷீட் தந்தார். எல்லோரும், “உங்களுக்கு பத்து நாள் கால்ஷீட் தந்தாரா?” என ஆச்சரியப்பட்டார்கள். அவர் தந்த ஒத்துழைப்பிற்கு நன்றிகள். இந்த நேரத்தில் ஓடிடிக்கு என்னை அணுகிய செந்தில், கிருஷ்ணன் குட்டி, பிரதீப், ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீரிஸ் என்னுடைய மற்ற படைப்புகள் போல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

‘சட்னி சாம்பார்’ சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது. யோகி பாபு, வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன், இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் படத்தொகுப்பினை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.