

அமேஸான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் எக்ஸாம் இணையத் தொடரைப் புஷ்கர் – காயத்ரி இணையின் வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.
தைகாராவிற்குச் சென்னையில் இருந்து மாற்றலாகி வரும் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) மரமல்லியைக் கடத்தி விடுகிறார் ஜான்சி. மரமல்லிக்குப் பதிலாக ஆள் மாறாட்டம் செய்து ஜான்சி பதவியேற்கிறார். பிராந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (RPSC) நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார் ஜான்சி. யாரிந்த ஜான்சி, ஏன் அவர் இந்த ஊழலை வெளிக்கொண்டு வரப் போராடுகிறார், மரமல்லியை ஏன் கடத்தினார் என கதை நீள்கிறது.
டி.எஸ்.பி.யாகத் தைரியமாக ஆள் மாறாட்டம் செய்ய உதவுவதோடு, ஜான்சியை உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்தும் ஜெயசந்திரனாக அப்பாஸ் நடித்துள்ளார். அவருக்கும் ஜான்சிக்கும் என்ன உறவு என்ற அத்தியாயம் ரசிக்க வைக்கிறது.
மரமல்லியாக அதிதி பாலன் நடித்துள்ளார். அதிகாரச் செருக்கு, கோபம், இயலாமை, குற்றவுணர்வு என நுணக்கமான உணர்வுகளை அழகாகத் தன் முகத்தில் கொண்டு வந்துள்ளார். ஜான்சியாகத் துஷாரா விஜயன் நடித்துள்ளார். அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒருவரால் அனைத்தையும் இழந்த பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவர் டி.எஸ்.பி.யாகத் தோன்றும் போது கம்பீரத்திற்குப் பதில் ஒரு மென்சோகத்தைச் சுமந்தவராக உள்ளார். உண்மையை அறியும் ஆவல், பழிவாங்கும் உத்வேகம் ஏதுமில்லாமல் சோகத்தைப் பிரதானமாகத் தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளதைத் தவிர்த்திருக்கலாம்.
முதல் அத்தியாயத்தில், காருக்குள் அதிதி பாலனுக்கும், துஷாரா விஜயனுக்கும் இடையே நடக்கும் சண்டையை அற்புதமாக இயக்கியுள்ளார் சண்டை இயக்குநர். அதே போல், ஆறாவது அத்தியாயத்தில், இருவரும் ஓரணியாக இணைந்து தன்னைக் கொல்ல வருபவர்களிடம் சண்டையிடும் காட்சியையும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார் அருண் அமரேந்திரன்.
சரண்யா எனும் பாத்திரத்தில் கெளரவ தோற்றத்தில் வசுந்தரா காஷ்யப் நடித்துள்ளார். இளவயது சரண்யாவாக நடித்துள்ள அக்ஷதா அஜித், அப்பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான தேர்வு. அவரது முகமே ஒரு கதை சொல்கிறது. வில்லனாக நடித்துள்ள நரேன் மணியும், அவரது இளம் வயதினனாக நடித்துள்ள சூரிய ஜெயாவும் நன்றாக நடித்துள்ளனர். IQ திறனைச் சோதித்துக் கொள்ளும் வகையில், போட்டித் தேர்வுக்கான கேள்வியைத் துஷாரா விஜயனும், நரேன் மணியும் மாற்றி மாற்றிக் கேட்டுக் கொள்ளும் இறுதி அத்தியாயம் ரசிக்க வைக்கிறது.
கனவுகளோடு அரசு பணியாளர் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, இந்த சிஸ்டம் இழைத்த மிகப் பெரிய துரோகத்தை இத்தொடர் துகிலுரித்துள்ளது. இவற்றிற்கு மூளையாகச் செயற்படும் திமிங்கலம் யாரென்பதைச் சொல்லாமல் இரண்டாவது சீசனிற்கான லீடாக விட்டுள்ளனர். தொடரில் ஒரு கதாபாத்திரம் இறக்கும் பொழுது, அவரது உடலை ஆற்றோடு போகவிட்டு, உடன் ஒரு வாத்தையும் சேர்த்து அனுப்புகின்றனர். ஏழு அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரை எழுதி இயக்கியுள்ளது இயக்குநர் A.சற்குணம் என்பதை நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாக உள்ளது. அவரது வழக்கமான பாணியில் இருந்து மிகவும் விலகி, வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் சார்பாக கிரியேட்டிவ் புரொடியூசர்களாகப் பணியாற்றிய புஷ்கர் – காயத்ரி இணையின் பாணியில் திரைக்கதை அமைத்துள்ளார்.


