Shadow

பிக் பாஸ் 3: நாள் 96 – பட்டாம்பூச்சியாய் லாஸ்

bigg-boss-3-day-96

முந்தைய நாளில், ‘நான் வீட்டுக்கு போகணும்’ என லாஸ் அழ, எல்லோரும் உட்கார்ந்து சமாதானபடுத்தினர். இரண்டு நாளைக்கு முன்னாடி கவினிடம், ‘இன்னும் கொஞ்ச நாள் தானே!’ என அடவைஸ் பண்ணினார். ‘அந்த அட்வைஸ் உனக்குக் கிடையாதா? நீயே இப்படி செய்யலாமா?’ என முகின் கேட்க, ஷெரினும் வந்து சமாதானப்படுத்த, கொஞ்சம் நார்மலுக்கு வந்தார் லாஸ்.

9.30 மணிக்கு திடீர் என பாட்டு போட, ‘வரப்போறது ஐஸ்வர்யா தான்’ என தர்ஷன் அடுத்த நொடியே சொன்னார். மிகத் தெளிவாகத் தான் இருக்கார்.

சென்ற சீசனின் சர்வாதிகாரி ஐஸ்வர்யா உள்ளே நுழைந்தார். கமல் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், “ஒரு ட்ரெஸ்ஸு போட்டிருந்தா. அய்யோ அத்த நீ பார்க்கணுமே! முத்தி போன பைத்தியம் தன் ட்ரஸ்லாம் தானே கிழிச்சுக்குமே அப்டி இருந்தது.”

ஐஸ்வர்யாவும், “அலேகா” என்ற தன் படத்தின், போஸ்டரை ரிலீஸ் பண்ணினார். அதற்கப்புறம் உரை வேற!

ஐஸு வந்ததற்காக ஒரு டாஸ்க். இரவு 10 மணிக்கு டாஸ்க் வைத்து, ‘நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்’ எனக் காட்டிக்காறாராம். என்னமோ போங்க!

“என் பேரு மீனாகுமாரி” பாடலுடன் தொடங்கியது நாள். ரொம்ப நாளைக்கு அப்புறம் வீட்டில் இருந்த எல்லோரும் ஆடினார்கள்.

எல்லோரும் ஜாலியாக உட்கார்ந்து பாட்டு பாடிக் கொண்டிருக்க, நடுவில் ‘சைலன்ஸ்’ எனச் சொல்லி, லாஸை கன்ஃபெஷன் அறைக்குக் கூப்பிட்டார். அங்கே இருந்த அறிவிப்பைப் படிக்கச் சொல்ல, லாஸ் மனதிற்குள்ளேயே படித்துக் கொண்டிருந்தார். ‘மனப்பாடம் பண்ணிட்டீங்களா லாஸ்?’ எனக் கேட்டு கலாய்த்த பிக் பாஸ், டாஸ்கோட விதியை சத்தமாகப் படிக்கச் சொன்னார். கிளம்பும் போது, ‘பிக் பாஸ் நான் ஒன்னு கேக்கோணும்?’ என லாஸ் ஒரு பிட்டைப் போட, ‘கேளுங்க’ எனச் சொன்ன பாவத்துக்கு, “உங்களுக்கு என்னைப் பிடிக்குமா பிக் பாஸ்” எனக் கேட்டு வெக்கப்பட்டு, ஃபைலை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டார் லாஸ். கொஞ்ச நேரம் யோசித்த பிக் பாஸ், “பிடிக்கும் லாஸ்லியா” என சொல்லி அனுப்ப, முகம் முழுக்க சிரிப்பாக வெளியே வந்தார். உள்ள நடந்ததை மற்றவர்களிடம் சொல்ல, ‘பிக் பாஸ் என்னைப் பிடிக்கும்னு சொல்லிட்டாரு’ எனச் சொன்ன உடனே, ஷெரின் காட்டின பொய்க் கோபம் அழகு. படித்து முடித்துவிட்டு, பாட்டு பாடி, பழைய பட்டாம்பூச்சியாகச் சுற்திக் கொண்டிருந்த லாஸ், கடைசியில் அந்தப் பாட்டு பிக் பாஸ்க்குத்தான் எனச் சொல்ல, அதைக் கேட்ட ஷெரின், ‘இப்பவே கதவைத் திறங்க. நான் போறேன்’ என பொய்க்கோபத்தோடு கத்தினார். எனக்குத் தெரிந்து, இந்த சீசனில் பாய்ஸ் டீம் இல்லாத, செம்ம ஜாலியான சீன் இதுவாகத் தான் இருக்கும்.

‘எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்?’ என்ற டயலாக் இப்ப லாஸ்க்குத்தான் பொருந்தும். வந்த சில வாரங்களுக்கு இப்படித்தான் ஜாலியாக இருந்தார். அப்பொழுது இந்தப் பெண்ணைப் பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதன் பின், காதல் என்கிற பெயரில், தன் அடையாளத்தை எல்லாம் தொலைத்து விட்டு, ஏதோ ஒரு சிறையில் இருந்த மாதிரி இருந்தார். இதோ இப்பொழுது விடுதலையாகி, சுதந்திரமாக இருக்கிற லாஸ், இன்னும் 10 நாளைக்கு இப்படியே இருக்கட்டும்.

பிக் பாஸ், ‘சைலன்ஸ்’ எனச் சொன்னதைக் கிண்டல்டித்த சாண்டி, “சைலன்ஸ், காதல் செய்யும் நேரம் இது” என பாட்டு பாடி தான் ஒரு 80’ஸ் கிட் என நிரூபித்தார்.

பாக்ஸிங் கிளவுஸ் போட்டுக் கொண்டு, சின்னச் சின்ன தெர்மாக்கோல் பந்துகளை அள்ளி எடுத்துக் கொண்டு வந்து நிர்ப்பவேண்டும். இதுதான் டாஸ்க். இதிலேயும் வழக்கம் போல தர்சன் தான் ஜெயிச்சான்.

அடுத்த இன்னொரு டாஸ்க். ஆக்டிவிட்டி ஏரியாவில், ஒரு கோல் போஸ்ட் இருக்கும். அங்கே கொடுக்கப்பட்ட பந்துகளில் ஒரு வாசகம் எழுதியிருக்கும், அந்த பாலை கோல் போட்டால், அந்த ஆசை நிறைவேற்றப்படும். அறிவிப்பு வரும்போதே, ‘சோறைப் பத்தி ஏதாவது எழுதிருப்பாங்களா?’ எனக் கேட்ட தர்ஷன், சரியாக பரோட்டா- கோழிக்கறி பந்தைத் தேர்ந்தெடுத்து கோல் அடித்தார். முகின் ஹெட் மசாஜ் வேணும் என நினைத்து, மூன்று வாய்ப்புகளையும் மிஸ் பண்ணினார். தனக்கு ஸ்பா வேணும் எனக் கேட்டு, கோல் அடித்தார் ஷெரின். கிரில் சிக்கன் வேணும் என சாண்டி. லாஸ் எடுத்த பந்த, பிக் பாஸ் முகத்தை பார்க்க வேண்டும் எனஇருந்தது. லாஸ் அதை கோல் அடிக்க, எல்லோரும் துள்ளிக் குதித்தனர்.

‘இந்த வீட்டிலேயே ஹெட் மசாஜ் செய்ய ஷெரின் இருக்கும் போது, நீ எதற்கு வருத்தப்படுகிறாய்?’ என சாண்டி கேட்க, ‘ஷெரின் இருப்பது தெரிந்து தான், எனது மூன்று வாய்ப்புகளையும் வீணடித்தேன். எப்படி என் தந்திரம்?’ எனச் சொல்லி, முகின் சிரித்த இடமும் ரொம்பவும் ரசித்தேன்.

‘ரொம்ப சிரிச்சுட்டாங்க, இவங்களை அழ வைக்கலாம்’ என பிளான் போட்ட பிக் பாஸ், ‘இந்த வீட்டில் இருந்து போன, நீங்க மிஸ் பண்ற நபரைப் பத்திப் பேசுங்க’ எனச் சொன்னார். முகின், அபிராமியைப் பற்றி, தர்சன், சேரனைப் பற்றி, சாண்டி, கவினைப் பற்றி, ஷெரின், அபி & சாக்‌ஷி பற்றி, லாஸ், அபி & கவின் & சேரனைப் பற்றியும் பேசினார்கள். யாரும் அழவில்லை. நன்றாகவும் இருந்தது.

இப்படியாக இந்த நாள் இனிதே முடிந்தது.

மகாதேவன் CM