
இப்படிக்கு விரக்தி
இந்த உலகத்தில் யாருக்குமே என்னை பிடிக்கவில்லை. ஆனால் காதலின் மிகுதி காரணமாக நான் அனைவரையும் தழுவிக் கொள்கிறேன். இப்படி தான் திருவிழாவில் குச்சி 'ஐஸ்' வேண்டும் என அடம்பிடித்த ஏழு வயது தம்பியின் தலையை தட்டி அழைத்து சென்றான் பத்தாம் வகுப்பு படிக்கும் சிலம்பரசன். அந்த ஏழு வயது சிறுவன் தான் எத்தனை அழகு!! உடனே அவனது வதனத்தில் போய் குடியேறி விட்டேன். தம்பியின் மீது அதிக அக்கறை சிலம்பரசனுக்கு இல்லை எனினும் எனக்கு சிலம்பரசன் மீது நிறையவே இருந்தது. அவன் வாங்கி தந்த கண்ணாடி வளையல்களை அவனது ஆள் ரெட்டை ஜடை ஜோதிலட்சுமி ஆசையாக போட்டு பார்த்து விட்டு, 'அப்பா வைவாரு' என அவனிடமே கழட்டிக் கொடுத்து விட்டாள். தம்பியை அதட்டுவது போல் ஜோதியை அதட்டுவது சிரமம் என்றபடியால் சிலம்பரசனையும் ஆட்கொள்ள எனக்கு காரணம் கிடைத்தது. தம்பிக்கு குச்சி 'ஐஸ்'சாவது வாங்கி தந்திருக்கலாம் என்று நினைத்தான் சிலம்பரசன். காலம் கடந்த...
















