

அந்நியர்கள் நுழையத் தடை விதைத்திருக்கும் சுப்ரமணியபுரத்து பரமசிவனும், சாத்தான்கள் நுழையத் தடை விதித்திருக்கும் யோக்கோபுரத்து பாத்திமாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மதத்தைக் காரணம் காட்டி இருவும் கொல்லப்படுகிறார்கள். பரமசிவனும் பாத்திமாவும் தங்கள் மரணத்திற்குப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை.
ஒன்றாக இருந்த ஊரைப் பணத்தாசை காட்டி மதம் மாற்றி இரண்டாக உடைக்கிறார்கள் எனக் காத்திரமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். இதுதான் படத்தின் பிரதான நோக்கம். வசனங்கள், காட்சிகள் என அனைத்தும் அதை நோக்கியே நகர்கின்றன. பரமசிவன், பாத்திமா காதலே கூடத் தொட்டுக்கோ, துடைச்சுக்கோ எனக் கிளைக்கதையாகத்தான் வருகிறது.
பாத்திமாவின் அண்ணன் ஃபெலிக்ஸாக நடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் M.சுகுமார்தான் படத்தின் வில்லன். அவருக்கு மத அபிமானம் எல்லாம் கிடையாது. அவரது குறிக்கோள் பணம் மட்டுமே! இயக்குநரின் நோக்கமும், கதாபாத்திர வார்ப்பும் முரணாகும் புள்ளி இது. மதம் பரப்புவதைக் கடமையாகச் செய்யும் பாதிரியராக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். இவரது பாத்திரத்தைக் கிண்டல் செய்யப் பயன்படுத்தியிருந்தாலும், சாமர்த்தியமாகத் தன் நோக்கத்திற்குச் சாதமாகப் பயன்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார் இயக்குநர். கொலைகளை விசாரிக்கும் இன்ஸ்பெக்டராக இயக்குநரே நடித்துள்ளார். அவருடன் வரும் சக காவலதிகரிகளான காதல் சுகுமாரையும், ஆறுபாலாவையும் நகைச்சுவைக்காகப் பயன்படுத்த முயற்சி செய்துள்ளார்.
தமிழ் வாத்தியார் பரமசிவனாக வரும் விமல், தமிழ் மொழியின் தொன்மையை இந்து மதத்தின் பெருமையாகவே பார்க்கிறார். கொம்பு சீவி முறுக்கேற்றி விட்டது போலவே இருக்கிறது அவரது கதாபாத்திரம். சிறுவயது பரமசிவன் கூடக் கொதிப்பாகவே நடித்துள்ளார். படத்தின் கொதிநிலையைத் தணிப்பது பாத்திமாவாக வரும் நீள்விழிகள் கொண்ட சாயாதேவிதான். SIR படத்தைத் தொடர்ந்து, விமல், சாயாதேவி இருவருமே ஆசிரியர்களாக மீண்டும் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் க்ளைமேக்ஸை காஞ்சனா பாணியில் முடித்துள்ளனர்.
ஊரையே அழிக்க நினைகின்றன பேய்கள். ஆனால் முதுகில் குத்தியது தன் மதத்தைச் சேர்ந்த நண்பனாக இருந்தால் மன்னித்துவிடலாம் எனும் உயரிய கருத்தைப் படம் தாங்கி வந்துள்ளது.


