Shadow

பிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ?”

bigg-boss-day-44

முந்தைய நாளின் தொடர்ச்சியைக் காட்டினர். அங்கே சரவணனும் இருந்தார். ‘என்னடா இது? நேத்து தானே வெளிய போனாரு?” எனா யோசித்துக் கொண்டே தான் பார்க்க வேண்டியிருந்தது. காலையிலேயே மதுவும், அபியும் சண்டைக்குத் தயாராக நின்றனர். கேப்டன் முகின், ‘அங்க என்னம்மா சத்தம்?’ எனக் கேட்கவும், ‘சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்’ எனச் சொன்னாலும், அது சண்டைக்கு முந்தின லெவலில் இருந்தது தான் உண்மை. அபி முகத்தைக் காண்பித்து விட்டுப் போக, முகின் பின்னாடியே சமாதானப்படுத்தப் போனார். இந்த கவினைப் பார்த்து அவரை மாதிரியே எல்லா ஆண்களும் இருப்பாங்க என நினைத்து விட்டார் போல அபி. மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்தால், “இல்ல மச்சா” என உட்கார்ந்து, இரண்டு மணி நேரம் பேசணும் என எதிர்பார்க்கிறார்.

ஆனா முகின்ல் அப்படி இல்லை. ‘கோச்சுக்கறியா, சரி கோச்சுக்கோ. நான் போய் ஃப்ரூட்டி குடிச்சுட்டு வரேன்” எனப் போய் விடுகிறார். அதே சமயம் தேவையில்லாத சென்டிமென்ட்ஸ்க்கு இடம் கொடுக்காமல், தெளிவாக கட் அண்ட் ரைட்டாகப் பேசுகிறார். அதனால் ஒவ்வொரு தடவையும் அபி தான் இறங்கிப் போக வேண்டியிருக்கு. ஆகக் கண்டிப்பாக இந்த உறவு நீண்ட நாளுக்கு நீடிக்காது என்று தான் தோன்றுகிறது.

சாக்ஷியும், ஷெரினும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, இந்தப் பக்கம் அமர்ந்திருந்த கவினும் சாண்டியும் ஷெரினை அழைத்து சம்பந்தமே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த சாக்ஷிக்கு மண்டைக்குள் பல்பு எறிந்திருக்கும்.

கவின், சாண்டி அணி வழக்கம் போல ஒரு பழைய பாட்டை ரீமிக்ஸ் செய்து பாடிக் கொண்டிருந்தன. ‘அது தன்னைப் பார்த்து தான் பாடுறாங்க’ என புகைபிடிக்கும் அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார் சாக்ஷி. ஏற்கெனவே ஷெரினைக் கூப்பிட்டதும், தன்னிடம் இருந்து ஷெரினைப் பிரிக்கப் பார்க்கிறாங்க என முடிவு பண்ணிட்டார். ‘டூ இன் டூ இன் டூ… டூடூடூடூடூ’ எனத் தேவையில்லாமல் சீன் போட்டு அட்டென்ஷன் சீக்கிங் செய்வதில் சாக்ஷி நம்பர் ஒன்னாக இருக்கார். இத்தனை நாளில் ஒரு தடவை கூட யாரையும் புண்படுத்துகின்ற மாதிரி பாடவே இல்லை. அதுவும் இப்பொழுது கவின் சுத்தமாகப் பெண்கள் பக்கமே போவதில்லை. ஆனாலும் சாக்ஷிக்கு இப்படித் தோன்றுகிறது. இது யதார்த்தமாக தெரியவில்லை.

இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பித்தது. வீட்டில் லான் ஏரியாவுக்கு மேலிருந்து எறியப்படும் காயின் போன்ற ஒன்றை எல்லோரும் சேகரிக்க வேண்டும். அதுல் பாயின்ட்ஸ் குறிக்கப்பட்டிருக்கும். அதிக பாயின்ட்ஸ் எடுத்தவருக்கு அடுத்த வார நாமினேஷனில் இருந்து விலக்கு கிடைக்கும். முகத்தை மூடிக்கொண்டு இரண்டு பேர் மேலிருந்து காயின்ஸை வீச ஒரே அடிதடியாக இருந்தது. முதல் ரவுண்டில் சேரனுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. ஷெரின் தன்னிடம் இருந்ததை சேரனிடம் கொடுத்தார். அதைப் பார்த்து லியாவும் ஒன்று கொடுத்தார். மொத்தம் மூன்று ரவுண்ட் நடந்த போட்டியில், சாண்டி முதல் இடத்திலும், சரவணன் இரண்டாவது இடத்திலும் வந்தனர்.

அதற்கப்புறம் தான் சரவணனை கன்ஃபெஷன் அறைக்கு வாங்க எனக் கூப்பிட்ட பிக் பாஸ், அவரைக் கண்ணைக் கட்டி அழைத்துக் கொண்டு சென்றனர். “சித்தப்பூ எங்கடா?” என கவினும், சாண்டியும் வெளியே கேட்டுக் கொண்டே இருந்தனர். ‘ஏதோ பிரச்சினை’ என சாண்டி அப்பவே சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு பிக் பாஸ் அஃபீஷியலாக அறிவித்த உடனே கவினும், சாண்டியும் அழுக, மது இந்தப் பக்கம் கேவிக் கேவி அழுகை. கவின், சாண்டியோட சோகத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. மது கூட ஓக்கே. அவங்களுக்கு எந்த உணர்வாக இருந்தாலும் அது எக்ஸ்ட்ரீம் தான். ஆனால் லாஸ், அபி எல்லாம் கண்ணீர் விட்டதைத்தான் நம்ப முடியவில்லை.

வீடே சோகமாக இருந்தது. சொல்லாமல் கொள்ளாமல் போனதால், ‘சரவணன் வீட்டில் ஏதாவது பிரச்சினையா இருக்குமோ? அவர் குழந்தைக்கு ஏதாவது ஆகிருக்குமோ?’ என யோசிக்க ஆரம்பித்தனர். அதனால் பிக் பாஸ் மறுபடியும் கூப்பிட்டு விளக்கம் கொடுக்க வேண்டியதாகப் போய்விட்டது.

ஆளாளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க, கவின், சாண்டிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் சேரன். ஒரு படத்தில் செத்துப் போன பாட்டி படத்தை வைத்து கார்த்திக் அழ, கூடவே ஜெமினி அழ, ‘இது என்னடா வம்பா போச்சு?’ என கவுண்டமணியும் அழுவார். அழாமல் போனால் நாம் வருத்தப்படலே!’ எனச் சொல்லிருவாங்களோ எனப் பயத்தில் எல்லோரும் சோகமாக இருந்த மாதிரி தான் தெரிந்தது.

‘இவர்களை எல்லாம் அழ வைக்கிறதுக்கு நாங்க கன்டென்ட் தேடி டயர்ட் ஆகிட்டிருக்கோம். இவனுக என்னடான்னா இப்படி அழுகறானுக? கொஞ்சமாவது அழுகாச்சியோட வேல்யூ தெரியுதா?’ என யோசித்த பிக் பாஸ், ‘அப்படியே இருங்கடா, கன்டென்ட் தரேன், அதுக்கும் சேர்த்து அழுங்க’ என ஒரு டாஸ்க் கொடுத்தார்.

தன் நண்பர்களைப் பற்றி ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் பேசவேண்டும். அப்பவும் சிலர் அழுதனர். கடைசியாக மதுமிதா, “சரவணன் எங்க?” எனப் பிரார்த்திப்பதோடு எபிசோட் முடிந்தது.

மகாதேவன் CM